வெள்ளி, ஏப்ரல் 13, 2012

மீண்டும் மிரட்டும் அன்னா பின்னால் சில ஆட்டுக்குட்டிகள் .. ஓநாய்களின் ரத்த ஆசையுணராமல்..

நன்றி : தமிழாக்கம் செய்த பிரபாகரன்
மற்றும் கீற்று வலைத்தளம்


பிறகு ஆகஸ்டு 16ம் தேதி காலையில் தனது இரண்டாம் "சாகும்வரை போராட்ட"த்தை அன்னா ஹசாரே துவங்கினார். அவர் தனது உண்ணாவிரதத்தைத் துவங்கும் முன்னர் அல்லது அவர் எந்தவித சட்டரீதியான குற்றத்தைச் செய்வதற்கு முன்னரே, கைது செய்யப்பட்டு சிறைச்சாலையில் அடைக்கப்பட்டார். விளைவாக ஜன் லோக்பால் மசோதாவை நடைமுறைப்படுத்தும் போராட்டம் என்பது 'போராடும் உரிமைக்கான? போராட்டம்', ஜனநாயகத்திற்கான போராட்டம் என மாற்றப்பட்டு ஒருங்கிணைக்கப்பட்டது. இந்த இரண்டாம் சுதந்திர போராட்டத்தைத் துவங்கிய சில மணி நேரத்திற்குள் அன்னா விடுவிக்கப்பட்டார். ஆனால் புத்திச்சாதுரியத்துடன், அன்னா சிறைச்சாலையை விட்டு வெளியேற மறுத்து விட்டார். விளைவாக தான் உண்ணாவிரத்தைத் துவங்கிய திகார் சிறையிலேயே கௌரவம்மிக்க விருந்தாளியாகத் தொடர்ந்து இருந்தார். தனக்குப் பொதுவிடத்தில் உண்ணாவிரதம் இருக்கும் உரிமையைத் தரவேண்டுமென கோரிக்கையை விடுத்தவாறு, தொடர்ந்து உண்ணாவிரதம் இருந்தார். அந்த மூன்று நாட்களும் மக்கள் கூட்டமும் தொலைக்காட்சி வண்டிகளும் சிறைச்சாலைக்கு வெளியே கூடி நிற்க, 'அன்னா அணி'யின் உறுப்பினர்கள் திகார் என்ற உயர்காவல் சிறைச்சாலைக்கு உள்ளேயும் வெளியேயும் காற்றைக் கிழித்துக் கொண்டு அங்குமிங்கும் பறந்து சென்று கொண்டு இருந்தார்கள். அவர்கள் உள்ளேயிருந்து கொண்டு வந்த வீடியோ செய்திகளை, அனைத்துத் தேசிய மற்றும் அனைத்து தனியார் தொலைக்காட்சி ஊடகங்களில் கொடுத்து வெளியிட்டனர். (இந்த மாதிரியான ஆடம்பரம், வேறு நபருக்கு அங்கு அனுமதிக்கப்பட்டிருக்குமா?)

இதற்கிடையில் தில்லி முனிசிபல் கமிசனின் 250 ஊழியர்கள், 15 லாரிகள் மற்றும் 6 மண் புரட்டிப் போடும் இயந்திரங்களின் உதவியுடன், சகதியாகக் கிடந்த ராம்லீலா மைதானத்தில் நாள் முழுக்க வேலை பார்த்து, வார இறுதியில் அரங்கேறப் போகும் மிகப்பெரிய 'ஷோ'வுக்கு, அதைத் தயார் செய்து கொண்டிருந்தார்கள். முடிவே இல்லாமல் காத்திருந்து விட்டு, கிரேனில் தொங்கவிட்ட காமிராக்களையும் உற்சாக கோசமிட்டுக் கொண்டிருந்த கூட்டத்தையும் அவதானித்து விட்டு, இந்தியாவில் மிகவும் விலைகூடுதலான மருத்தவர்களின் மருத்துவ உபசரிப்புடன், அன்னாவின் மூன்றாவது கட்ட "சாகும் வரை உண்ணாவிரதம்" துவங்கியது. உடனே பல தொலைக்காட்சி தொகுப்பாளர்கள், "காஷ்மீரில் இருந்த கன்னியாகுமரி வரை, இந்தியா ஒன்றுதான்" என்று நம்மிடம் சொல்ல? ஆரம்பித்து விட்டார்கள்.

இதற்கிடையில் அன்னாவின் புரட்சிக்கான கட்டமைப்பும் நடன இயக்கமும், அதற்கான உக்கிரமான தேசியவாதமும் கொடி அசைத்தலும், இடஒதுக்கீடு எதிர்ப்பாளர்களின் எதிர்ப்புப் போராட்டத்தில் இருந்தும், உலகக்கோப்பை வெற்றி அணிவகுப்பிலிருந்தும், அணுச்சோதனை கொண்டாட்டத்தில் இருந்தும் கடன் வாங்கப்பட்டுள்ளது. அவர்களது உண்ணாவிரதத்தை நீங்கள் ஆதரிக்காவிட்டால், அவர்கள் உங்களை "உண்மையான இந்தியன் இல்லை" என்று அடையாளப்படுத்துவார்கள். அது போலவே இந்த 24 மணிநேர ஊடகங்களும், இந்த நாட்டில் இந்தச் செய்தியை விட்டால், வெளியிடுவதற்கு உருப்படியான வேறு செய்தியே இல்லை என்று முடிவெடுத்துவிட்டன?.


இந்த உண்ணாவிரதம் இரோம் சர்மிளாவின் பத்து வருட உண்ணாவிரதத்திற்கு எந்த விதத்திலும் அர்த்தம் வழங்கவில்லை. சந்தேகத்தின் பேரிலேயே யாரையும் கொல்லலாம் என மணிப்பூரில் வழங்கப்பட்டிருக்கும் AFSPA (Armed Forces [Special Power] ACT) சட்டத்திற்கு எதிராக பத்து வருடமாக உண்ணாவிரதம் இருந்து (அவருக்கு வலுகட்டாயமாக உணவு புகட்டப்பட்டாலும்) தனது எதிர்ப்பைப் பதிவு செய்திருக்கிறாரே இரோம் சர்மிளா, அவரை இப்போராட்டம் எந்த அர்த்தமும் இல்லாமல் கைவிட்டு விட்டது. அணு ஆலை வரக்கூடாது என்று பத்தாயிரக்கணக்கான கிராமத்துவாசிகள் கூடங்குளத்தில் தொடர் உண்ணாவிரதம் இருக்கிறார்களே, அந்த உண்ணாவிரத்திற்கு இந்த அன்னாவின் உண்ணாவிரதம் எந்த அர்த்தத்தையும் வழங்கவில்லை.

அன்னாவின் போராட்டத்தில் மக்கள் என்பவர்கள் யார்? இரோம் சர்மிளாவின் உண்ணாவிரத்தை ஆதரித்த மணிப்பூரிகள் மக்கள் இல்லையா? ஜகத்சிங்பூரிலும், கலிங்காநகரிலும், நியாம்கிரியிலும், பஸ்தாரிலும், செய்தாபூரிலும், சுரங்கக் கொள்ளைக் குண்டர்களுக்கு எதிராகவும், குண்டாந்தடிப் போலிஸ்காரர்களுக்கு எதிராகவும், திரண்ட ஆயிரக்கணக்கானவர்கள் மக்கள் இல்லையா? போபால் வாயுக் கசிவில், முடமானவர்கள், இறந்தவர்கள், மக்கள் இல்லையா? அல்லது நர்மதா பள்ளத்தாக்கில் கட்டப்பட்ட அணையால் இடம்பெயர்ந்தவர்கள் மக்கள் இல்லையா? தனது நிலத்தை எடுத்துக் கொள்ளக்கூடாதென எதிர்ப்பு தெரிவித்த நோயிடா அல்லது புனே அல்லது ஹரியானாவைச் சார்ந்த விவசாயிகள் மக்கள் இல்லையா? அன்னாவின் போராட்டத்திற்கான மக்கள் இவர்கள் இல்லை.

பின்னர் அன்னாவின் போராட்டத்திற்கான மக்கள் யார்? தான் கோரும் லோக்பால் மசோதா நாடாளுமன்றத்தில் விவாதத்திற்கு வைக்கப்பட்டு, சட்டமாக மாற்றப்படாவிட்டால், உணவருந்தாமலேயே உயிரை மாய்த்துக் கொள்வேன் என்று மிரட்டும் அன்னா என்ற 74 வயது மனிதரை, ஊடகத்தில் பார்க்கும் இந்த பார்வையாளர்கள்தான், அன்னாவின் போராட்டத்திற்கான மக்கள் ஆவர். எப்படி பசித்தவர்கள் புசிப்பதற்காக இயேசு கிறிஸ்து மீன்களையும் உணவுத் துண்டங்களையும் பல மடங்குகளாக ஆக்கினாரோ, அது போலவே தொலைக்காட்சி ஊடகங்கள் பல மடங்குப் பார்வையாளர்களைப் பெருக்கி, இந்த மக்களை பன்மடங்காக்கியது. "ஒரு பில்லியன் குரல்கள் ஒலித்து விட்டன" என்று நமக்குச் சொல்லப்பட்டு விட்டது. "இந்தியா என்றால் அன்னாதான்".

கிராம குழுமமான ரலேகன் சித்தியில் பயின்ற, முகுல் சர்மாவைப் பற்றி நாம் இப்போது கேள்விப்படுகிறோம். அங்கு கடந்த 25 வருடமாக ஒரு கிராம பஞ்சாயத்து தேர்தலோ அல்லது கூட்டுறவு சொசைட்டி தேர்தலோ கிடையாது என்பது தெரிகிறது. ஹரிஜன் குறித்து அன்னாவின் கருத்தை அவரது வார்த்தைகள் மூலமாகவே வந்தடையலாம்: "மகாத்மா காந்தியின் பார்வையையே ஒவ்வொரு கிராமமும் கொண்டிருக்க வேண்டும். ஒவ்வொரு கிராமத்திலும், ஒரு 'சமார்', ஒரு 'சுனார்', ஒரு 'கும்ஹர்' இருக்க வேண்டும். அவர்கள் தங்களது பாத்திரம் அறிந்து, தங்களது வேலைகளைச் செய்ய வேண்டும். அப்படிச் செய்தால்தான், ஒரு கிராமம் சுயசார்புள்ளதாக இருக்கும். இதைத்தான் நாங்கள் ரலேகன் சித்தியில் நடைமுறைப்படுத்தி வருகிறோம்". இப்படிப் பேசும் அன்னாவின் அணியில் இருக்கும் உறுப்பினர்கள், "சமத்துவத்திற்கான இளைஞர்கள்" என்ற இடஒதுக்கீட்டுக்கு எதிரான அமைப்பில் அங்கம் வகித்தவர்கள் என்றால், அதில் ஆச்சரியப்பட என்ன உள்ளது?

கோகோ கோலாவில் இருந்தும், லேமென் பிரதர்ஸில் (Lehman Brothers) இருந்தும் தாரளமாய் நிதி வாங்கிக் கொண்ட அரசு சாரா நிறுவனங்களை நடத்துபவர்கள்தான், அன்னாவின் கிளர்ச்சிப் பிரச்சாரத்தை முன்னின்று நடத்துபவர்கள். அன்னா அணியில் முக்கியப் பிரமுகர்களான அரவிந்த கெஜிர்வாலும் மணிஜ் சிசோடியாவும் நடத்தும் கபீர் நிறுவனம், போர்ட் பௌன்டேசனிடம் இருந்து மூன்று வருடங்களுக்கு முன்பு, 4 லட்சம் டாலர்களைப் பெற்றுள்ளது. "ஊழலுக்கு எதிரான இந்தியா" பிரச்சாரத்திற்கு நன்கொடை அளித்தவர்களில், அலுமினியம் ஆலைகளுக்குச் சொந்தமான நிறுவனங்களும் பௌன்டேசன்களும், பல துறைமுகங்களைக் கட்டிய நிறுவனங்களும், பல சிறப்புப் பொருளாதார பகுதிகளைக் கட்டிய நிறுவனங்களும், அரசியல்வாதிகளுடன் நெருங்கிய தொடர்புடைய பல கோடிக்கணக்கிலான நிதி சாம்ராஜ்யத்தை நடத்துபவர்களும், ரியல் எஸ்டேட் நிறுவனங்களும் அடக்கம். அவர்களுக்கு நன்கொடை கொடுத்தவர்களில் பலர் ஊழலில் ஈடுபட்டதற்காக கண்காணிப்பில் இருப்பவர்களாகவும் மற்றும் பலவித கிரிமினல் செயற்களில் ஈடுபட்டவர்களாகவும் உள்ளார்கள். இவர்கள் அனைவரும் ஏன் அன்னாவுடன் இவ்வளவு உற்சாகத்துடன் பங்கெடுக்கிறார்கள்?

அரசு தனது வழக்கமான கடமைகளைக் கை கழுவி, கார்ப்பரேசன்களும் அரசு சாரா அமைப்புகளும் அரசின் கடமைகளைத் (நீர் விநியோகம், மின்சார விநியோகம், போக்குவரத்து, தொலைத்தொடர்பு, சுரங்கம், சுகாதாரம், கல்வி) தங்களது கரங்களில் எடுத்துக் கொண்டுள்ள காலமிது. கார்ப்பரேட்டிற்குச் சொந்தமான ஊடகங்கள் பொது மக்களது எண்ணங்களைத் தங்களது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ள காலகட்டமிது. ஆகவே தற்போது இந்த கார்ப்பரேசன்களும் ஊடகங்களும் அரசுசாரா அமைப்புகளும் இந்த ஏதாவது ஒரு லோக்பால் மசோதாவின் அதிகாரத்திற்குள் தங்களை இணைத்துக் கொள்ள முயலும். அதற்குப் பதில், தற்போது பரிந்துரைக்கப்பட்டுள்ள மசோதா, அவர்களை முழுவதுமாய் நிராகரித்து விட்டது.

தற்போது மற்றவர்களைக் காட்டிலும் அதிகம் கூச்சல் போடுவதின் மூலமும், கேடுகெட்ட அரசியல்வாதி என்றும், அரசின் ஊழல் என்ற சங்கதியை அழுத்திப் பிரச்சாரமாகக் கொண்டு போவதின் மூலமும், தங்களை ஊழலின் கொடுக்குப் பிடியிலிருந்து விடுவித்துக் கொள்ள அவர்கள் முயல்கிறார்கள். அவர்கள் உருவாக்கிய தர்மாபோதச மேடையான அரசையே கொடூரமாகச் சித்தரித்து, அரசை பொதுவெளியில் இருந்து இன்னும் அகற்ற வேண்டுமென கோருவது, கண்டிப்பாக இரண்டாம் கட்ட சீர்திருத்தத்தை கொண்டு செல்வதற்காகத்தான். இதன் மூலம் இன்னும் தனியார்மயமாக்குதலை ஊக்குவிப்பதற்காகவும், பொது கட்டுமானத்திலும் இந்தியாவின் இயற்கை வளங்களை இன்னும் அதிகமாக அணுகும் வாய்ப்பை மேம்படுத்திக் கொள்வதற்காகவும் செய்யும் முயற்சிகளே இவையாகும். இதன் மூலமாக கார்ப்பரேசன் ஊழல்கள் சட்டப்பூர்வமாக்கப்பட்டு, அதற்கு 'பரிந்துரைக்கும் கட்டணம்' (Lobbying Fee)என்று பெயர் சூட்டப்படும் நாள் வெகுதூரம் இல்லை.
இந்தியாவின் 83 கோடி மக்கள் இன்னும் ஒரு நாளைக்கு இருபது ரூபாய்க்கும் குறைவான வருமானத்துடன்தான் வாழ்ந்து வருகிறார்கள். அவர்களை இன்னும் பராரிகளாக்கும் கொள்கைகளை வலுவாக்குவதின் மூலம், நாம் நமது நாட்டை ஒரு சிவில் சண்டைக்குள் முண்டித் தள்ளுகிறோம் என்றுதானே பொருள்?

இந்த அவலமான பிரச்னை இந்தியாவின் பிரதிநிதித்துவ ஜனநாயகத்தின் கையாலாகாதத் தன்மை மூலம் ஏற்பட்டுள்ளது. இதில் மக்களைப் பிரதிநிதித்துவப்படுத்தாதவர்களான கிரிமினல்களும் கோடீஸ்வரர்களும் பாராளுமன்றவாதிகளாக ஆக்கப்படுகிறார்கள். இவ்வமைப்பில் உள்ள எந்தவொரு ஜனநாயக அமைப்பும், சாதாரண மக்களால் அணுக முடியாததாக உள்ளது. அவர்கள் கொடி ஆட்டுவதைப் பார்த்து ஏமாந்து விடாதீர்கள்! நாம் நமது உள்நாட்டு இறையாண்மையை அதீதபிரபுக்கள் தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருவதற்கு நடத்தப் போகும் ஒரு போருக்குள் இழுக்கப்பட்டுக் கொண்டிருக்கிறோம். அப்போர் ஆப்கானிஸ்தானத்தின் போர்க்கிழார்கள் நடத்தும் சண்டையைப் போல் உக்கிரமாக இருக்கும். அதுதான் நமக்கு விதிக்கப்பட்டதாக இருக்கும் வாய்ப்புகள் உள்ளன.

வெங்காயம்


ஒரு சிறந்த படைப்பானது சரியான விளம்பரமின்மையாலும், பல பெரிய படங்களின் போட்டியாலும் கடந்த ஆண்டில் மக்களின் கவனத்தில் பதியாமற் போன நிலையில், அதனை மக்களிடம் கொண்டு செல்ல வேண்டும் என எண்ணிய இயக்குனர் சேரன் அவர்களும்,


தனது முதல் படைப்பில் வியாபார நோக்கம் சிறிதுமில்லாமல் தனது மனதைப் பாதித்த நிகழ்வுகளை மட்டும் முன்னிறுத்தி, ஒப்பனையற்ற கதை, ஒப்பனை மறந்த அந்தக் கதை மாந்தர்களாகவே உலா வரும் பெரியவர்களும், பாத்திரமறிந்து தங்கள் மிகைப்படுத்தாத நடிப்பால் சிறப்புச் சேர்த்த சினனஞ் சிறு குழந்தைகளும்,

கூத்துக் கலைஞராய் வந்து , வந்த இருபது நிமிடங்களிலும் தனது பாத்திரத்தினை எந்த உலக நாயகரும் இதைவிட சிறப்புறச் செய்ய இயலாது என நிரூபித்ததுடன், தனது மகனின் திரைக்கனவை பொருள் தந்து நனவாக்கிய தந்தை ஆகிய அனைவருமே மிகவும் போற்றுதலுக்கு உரியவர்கள்.

மகன் தந்தைக்காற்றும் உதவி இவன்தந்தை 
என்நோற்றான் கொல்எனும் சொல். 

ஆம் இந்தக் குறளுக்கு விளக்கமாக சங்ககிரி ராச்குமார் திகழ்கிறார் என்றால், 

அவரின் தந்தை, 

தந்தை மகற்காற்று நன்றி அவையத்து 
முந்தி இருப்பச் செயல் 

எனும் குறளுக்கு விளக்கமாக விளங்கியுள்ளார். 

கோடிகளில் புரளும் நாயகர்கள்.. மின்னும் வெள்ளைத் தோல் தாரகைகளுடன்...மிட் நைட் மசலாவில் {டாடி மம்மி வீட்டில் இல்ல.. தீப்பிடிக்க..தீப்பிடிக்க.. என்று } பார்க்கத் தகுந்த பாடல்களை நம் வீட்டின் வரவேற்பறையில் கொண்டு வந்து இளைஞர்களின் / இளைஞிகளின் உணர்வுகளைத் தூண்டும் நிலையில்..நாளைய முதல்வர்கள் நாற்காலிக் கனவின் மிதப்பில், தங்களின் அரசியல் கனவுகளுக்கு வடிவம் தரும் கதைக் களனில் இந்த மக்களை ரட்சிக்கும் தேவ தூதர்களாய்த் தங்களைக் காட்டிக் கொள்வதும், சுள்ளான்களின் கொலவெறிக் குத்தாட்டப் பாடல்களும்..பதிலுக்கு விரல் வித்தையின் சவடால்களுமாக ஒரு புறமென்றால்..பிரமாண்டங்கள்..ராமாயணங்களின் மறு வடிவங்கள்..உலகத்தர இயக்கம் (ஒன்றுமற்ற குப்பைகளைத் தங்கள் பெயரால் விற்பனை செய்வதுதான் உலகத் தரம்) இவையெல்லாம்தான் இந்த ஊடக உலகம் முன்னிறுத்தும் படங்கள், நடிகர்கள், இயக்குனர்கள். 

எவ்வளவு மன தைரியம் வேண்டும் இந்த சூழலில் தன் கண் முன்னால் கண்ட தன் மக்களின் அறியாமை, அதன் வலிகள் தந்த வேதனை அதற்கு எது மாற்றாக , மருந்தாக அமையும் என்பதை நேர்மையாய்ப் பதிவு செய்யும் துணிவு. ஒரு புதுமுக இயக்குனர் , நடிகர் ..தனது தந்தையின் பண உதவியுடன் சொந்தப் பணத்தில்..கொள்கையையே யாராவது மேடை போட்டுத் தந்தால் பேசுவோம் என்றிருக்கும் நிலையில்..தங்கள் சொந்தப் பணத்தில் வியாபாரம் பற்றி அஞ்சாது உருவாக்கிய மிகச் சிறந்த நேர்மையான திரைக் காவியம் இந்த வெங்காயம். 

உலக அளவில் சிறந்த இயக்குனர் எனப் போற்றப்படும் ஜப்பானின் அகிரா குரோசோவா அவர்கள் உருவாக்கிய செந்தாடி(Red Beard) எனும் திரைப்படத்தினைப் பார்க்கும் பொழுதிலெலாம் சில காட்சிகள் மனதை விட்டு அகலாத சித்திரங்களாய் பதிந்து விடுவதுண்டு. மொழி தெரியாத நிலையிலும் அதில் வரும் கதாபாத்திரங்கள், கதை நிகழும் களங்கள் நாம் நமது நாட்டில் இன்னும் சந்திக்கும் நிலையிலிருப்பதானால் நம் நெஞ்சத்தில் இடம் பிடித்து விடும். இந்தப் படம் அந்தக் களத்திற்குச் சற்றும் சளைத்ததல்ல என்பதும், அதன் சில கூறுகளை விஞ்சும் வகையில் அந்தக் கூத்துக் கலைஞரின் பரிதவிப்பும், பாட்டி பேரனுக்கிடையேயான பாச உணர்வும் அன்பின் வலிகளாய்ப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

கதை ஜாதகம், ஜோதிடம், நரபலி என சுற்றித் திரியும் சிலர் அடுத்தடுத்துக் காணாமல் போவதும், அவர்களைத் தேடி அலையும் காவல் துறையும்தான்.காவலதிகாரியின் காதலும் அதன் முடிவும் என அனைத்து முடிச்சுகளுமே மூட நம்பிக்கையெனும் மையப் புள்ளியை விட்டு எந்த இடத்திலும் விலகாமல் செல்கின்றது. பாதிக்கப்பட்ட சிறுவர்களைக் காக்க கடைசியில் காவலதிகாரி துப்பாக்கியைத் தூக்குவதுடன் கதை முடிகின்றது.வெள்ளிக் கிழமைகளில் பணம் தரலாமா? கூடாதா? ராகு காலம்.. எமகண்டம்..நல்ல நேரம்..நல்ல நாள் என்று இருக்கும் இருபத்து நாளு மணி நேரத்தில் மனிதன் பிரித்துப் பார்த்தால் அவன் மனதில் எண்ணுவது போல வாழ மிஞ்சும் நேரம் என்ன? என்ற அடிப்படைக் கேள்வி இன்றும் தொடர்ந்து கொண்டுதான் உள்ளது. இந்த சிக்கல்களில் சிக்கிச் சிதறும் மனித வாழ்வைச் சீரமைக்க எத்தனை பேர் பாடுபட்டாலும், இதனை தங்களின் வாழ்வாதரமாகக் கொண்டுள்ள அடிப்படைவாதிகள், எதிர்பார்ப்புகளாலும் ஆசைகளாலும் நிறைந்து கிடக்கும் மக்களை அவர்களின் எதிர்காலம் நலனுக்காக என்று கூறி ஆட்டிப் படைத்துக் கொண்டுள்ளனர். புத்தர் சொன்னார்..வள்ளலார் சொன்னார்..பெரியார் சொன்னார்.. என்ன நடக்கின்றது.. இந்த நபர்கள் இத்தகையவர்களின் கருத்துக்களை முறியடிக்க அனைத்துத் தந்திரங்களையும் கட்டவிழ்த்து விட்டுள்ளனர். இந்த மூடக் கருத்தினை எதிர்த்து நோபல் பரிசு பெற்ற ராமகிருஷ்ணன் வெங்கட்ராமன் சொன்ன போதும் இந்த வைதீக சனாதனிகள் எதிர்க்குரலை வலைத் தளம் வரை பரப்பியது குறிப்பிடத்தக்கது. அவ்வளவு ஆளுமையும் அதிகாரமும் அவர்களிடம் உள்ளது.

பாட்டி பேரன் இருவரிடையேயுள்ள பாச உணர்வும், இயலாமையும் நேர்த்தியாகப் படமாக்கப்பட்டுள்ளது. இயக்குனர் நடிகராகவும் தன் பங்கை சிறப்பாக செய்துள்ளார். அந்த நடிப்பு இன்றைய புகழ் பெற்ற நட்சத்திரங்களுக்குப் பாடமாயுள்ளது என்றே சொல்லலாம். அவரின் தந்தை கூத்துக் கலைஞராய்த் தனியே இன்றைய உலக நாயகர்களுக்கே பாடமெடுத்துள்ளார் என்று கூறலாம். கூத்துக் கலைஞரின் நடிப்பும், அந்தச் சிறுவனின் நடிப்பும் கண்களைக் குளமாக்கிச் செல்கின்றன. கதை மக்களிடம் உள்ளது. எங்கெங்கோ தேடி புரியாத கதைகளை விளக்கி வெங்காயமாக்கி மக்களையும் வெருக் காயங்களாக்கும் கதைகளை விட அவர்களின் கதைகள் அதன் படிப்பினைகளால் அவர்களின் வாழ்க்கைத் தரத்தினை மேம்படுத்தும் கதைகள்தான் இன்றைய தேவை. இதுதான் வெங்காயம்.. 

இயல்பான கிராமத்துப் பெண்ணாக வரும் நாயகி, சைக்கிள் கடைச்சிறுவன் அவர்களுக்கிடையேயான சம்பவங்கள் இயல்பான நகைச்சுவை, கருத்தாழமிக்க உண்மையிலேயே சவுக்கடியாய் வந்து விழும் இயல்பான வசனங்கள் என மண்ணின் மாந்தர்களின் வாழ்வினை அவர்களின் அறியாமையையும் இயல்பாய் எடுத்துரைக்கின்றது. சத்தியராஜ் அவர்கள் கௌரவ வேடத்தில் வந்து மனிதர்கள் மேல் கொண்ட உயரிய அன்பினால் இந்தச் சடங்குகளை எதிர்த்து வாழ் நாள் முழுதும் சளைக்காமல் போர் புரிந்த பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியாரின் அன்பினை கோடிட்டுக் காட்டுவதுடன் தன்னம்பிக்கையும், தன்மானமும் தான் முக்கியம் எனச் சொல்லிச் செல்கிறார். பேராசிரியர் சுபவீ அவர்களின் பாடலும், அறிவுமதி அவர்களின் பாடல்களும் கதையின் போக்கறிந்து எழுதப்பட்டுள்ளது. 

அதிகமான ஜனத் தொகை கொண்ட நாட்டில், அனைவருக்குமான கல்வி வசதி வாய்ப்புகள் எட்டாத நிலையில் இந்தக் கடவுள்களும், ஜோதிட, ஜாதக, நரபலி (சில காலங்களின் முன் உடன் கட்டையேறுதல்) போன்ற மூடப் பழக்கங்களும் குறிப்பிட்ட சிலருக்கு வாழ்வாதராமாக மாறிப் போனது. அவர்கள் தங்களின் பிழைப்புக்காக அதனைத் தக்க வைக்கச் செய்யும் முயற்சிகள், இந்த நாட்டில் அறியாமையில் உழலும் மக்களின் வாழ்க்கைச் சீரழிவுக்குக் காரணமாயுள்ளது. மக்களை அறிவியல் பூர்வமான சிந்தனைகளுக்குப் பழக்கப்படுத்த வேண்டிய கடமை இந்த அரசுகளுக்கு உள்ளது. அது அரசியலமைப்புச் சட்டத்தில் தெளிவாக்கப்பட்டுள்ளது. ஆனாலும் அது குறித்த சிந்தனையேயில்லாத, மத உணர்வுடைய பிற்போக்குத் த்னமான நீதியரசர்கள் உள்ள நாடும் இதுதான். அதனால்தான் மக்களின் நம்பிக்கையை மட்டும் வலியுறுத்தி இன்னும் தீர்ப்புகள் வருகின்றன, அந்தத் தீர்ப்புகளும் அவர்களின் பதவி ஓய்வு பெறும் நாளன்று வருவதுதான் வேடிக்கை. முற்போக்காய்த் தெரியும் நீதியரசர்கள் கூட இத்தகைய மூட நம்பிக்கைகளைப் பாதி சாடுவதும் மீதியில் தாங்களே வழுக்கி விழுவதுமாக உள்ளனர். 

இத்தகைய நாட்டில் இந்தச் சமூகப் பிரச்னைகளை சொந்தப் பணத்தில் நேர்மையாய் தனது இலக்கிலிருந்து வழுவாமல், பிரச்சார நெடியின்றி சிறந்த கலை வடிவத்தில் நமக்குக் கொடுத்த சங்ககிரி ராச் குமார் நம் பாராட்டுதலுக்குரியவர். அவர் தனது துறையில் மேலும் மேலும் வெற்றியடைய வேண்டும். அது தமிழர் தம் அல்லது இயக்குனரின் வரிகளில் திராவிட இனத்தின் தன்மானப் படைப்புகளாய்த் திகழும் என்பது நமது பேராசை. இந்தப் படத்தினை சரியான முறையில் மக்களிடம் கொண்டு செல்ல வேண்டும் எனக் கருதிய சேரன் அவர்களும், பிற இளைய இயக்குனர்களும் பல புதிய படைப்பாளிகளுக்கு கலங்கரை விளக்கமாகத் திகழ வேண்டும், இது போன்ற படைப்பாளிகளை உயர்த்தி வைக்க வேண்டும்.

திராவிட இயக்கங்கள் என்ன செய்து விட்டன என இன்றும் கொச்சைப்படுத்தும் நபர்களுக்குச் சாட்டையடியாய் வந்துள்ள சிறந்த படைப்பு, தந்தை பெரியார் முழங்கிய சொல் 'வெங்காயம்'. தலைவர்களின் கவனத்துக்கு..இது போல் வருடத்திற்கு இரண்டு படங்களாவது வந்தால் இன்றைய இளைய தலைமுறைக்கு இந்த இயக்கங்கள் ஆற்றிய பணி புரியும், இந்த சமுதாயங்களின் முன்னேற்றத்திற்குப் பணியாற்றியவர்கள், இயக்கங்கள் யார் அதனை ஓயாது எதிர்த்தவர்கள், எதிர்ப்பவர்கள் அவர்களின் இயக்கங்கள் எவை அது எவற்றின் பெயரால் நடைபெறுகின்றது என்ற தெளிவு கிடைக்கும். அந்தக் கலை மொழி கைவந்த நபர்களை ஆதரித்து அந்தச் சிந்தனைகளை மக்களிடம் கொண்டு செல்ல வேண்டியது காலத்தின் கட்டாயமாக உள்ளது. அதற்கு ஆவன செய்ய வேண்டியது அவர்களின் கடமையாகும்.

இதில் ஈடுபட்ட அனைவரையும் எவ்வளவு பாராட்டினாலும் தகும். மண் சார்ந்த படைப்புகள், இந்த மக்களுக்கான படைப்புகளை நாமும் வரவேற்போம்..அந்தப் படைப்பாளிகளை அரவணைப்போம்.அது வருங்கால சந்ததிக்கு நம் எண்ணங்களைச் சுமந்து செல்லும் என்பதால்தான்.