புதன், டிசம்பர் 01, 2010

நந்தலாலா - திரைப்படம்

தமிழில் சிறந்த படங்களைத் தரும் தரமான தயாரிப்பு நிறுவனங்களுள் குறிப்பிடத்தகுந்த நிறுவனமாக ஐங்கரன் படத் தயாரிப்பு நிறுவனம் உள்ளது. பேராண்மை, அங்காடித் தெரு என்ற வரிசையில் சமீபத்தில் வெளியான சிறந்த படைப்பு நந்தலாலா. சில ஆண்டுகள் பல்வேறு விதமான காரணங்களுக்காக வெளிவருவதில் தாமதமானாலும் தமிழின் சிறந்த படைப்புகளில் இடம் பிடிக்கும் படைப்பாகும் நந்தலாலா.

கோடிகளைக் கொட்டி, நடிக, நடிகையரின் கவர்ச்சியாலும், விளம்பரத்தாலும் காசாக்க முனையும் பெரும் இயக்குனர்கள் ஒரு புறம்,

இந்தியச் சந்தை மதிப்புக் கருதி இன்னும் ராமாயணத்தையும், மகாபாரதத்தையும் நவீனப்படுத்துவதாய்க் கூறிக் கொண்டு மனிதனைக் குரங்காய்க் குதிக்க வைத்து ஜல்லியடிக்கும் மெகா உலக இயக்குனர்களாக ஊடக உலகம் சித்தரிக்கும் காலியான பெருங்காய டப்பாவாய் மணக்கும் சிலர்.

ஒன்றுக்குமற்ற காரணங்களுக்கெல்லாம் உலகின் பல்வேறு இடங்களுக்கும் சென்று படப்பிடிப்பினை நடத்தி இங்கு தங்கள் அருமை பெருமைகளை தொலைக்காட்சியில் நீட்டி முழக்கி ரசிகர்களை வசப்படுத்த எண்ணும் கூட்டம்.

இதனிடையில் இயல்பான மனதைத் தொடும் கதையமைப்பு, இதமான மனதை வருடும் இசை, தமிழகத்திலேயேயுள்ள எழில் கொஞ்சும் இடங்களில் படப்பிடிப்பு என கனவுத் தொழிற்சாலையின் பிதாமகர்களுக்கே பாடமெடுக்கும் படம். சில ஆண்டுகள் பெட்டியில் உறங்கிய, இசையமைப்பாளருக்கும் இயக்குனருக்கும் உரசல் என பத்திரிக்கைகள் எழுதிய, தனது மிகச் சிறந்த படைப்பாகயிருக்கும் என இயக்குனரால் கூறப்பட்ட நந்தலாலா எனும் திரைக்காவியம் தடைகளைத் தாண்டி திரைக்கு வந்துள்ளது.இந்தப் படம் வெளியாகுமா என சில சமயங்களில் தனிமையில் கண்ணீர் விட்டிருப்பதாக இயக்குனர் கூறியுள்ளார்.

அதே சமயம் எண்பதுகளில் தோன்றிய ஒரு இயக்குனர் குழாமைப் போல் தமிழில் ஒரு புதிய இளந்தலைமுறை இயக்குனர்கள் உருவாகி வருவதும் அவர்கள் ஒருவருக்கொருவர் பல சமயங்களில் துணை நிற்பதுவும் நமக்கு உலக சினிமாவின் உயரம் தொட உதவும் எனும் எண்ணத்தை விதைக்கின்றது. இதனைத் தற்போது ஐங்கரன் போன்ற சில தயாரிப்பு நிறுவனங்களும் உணர்ந்துள்ளது கண்கூடானது.

மிஷ்கின் எனும் கதாநாயகன் ஒரு மன நலக் காப்பகத்திலிருந்து தனது உறவுகளைத் தேடிப் பயணிப்பதும் அதன் பின் அவனுக்கு இந்த உலகில் நிகழும் அனுபவங்களும்தான் உலகின் மிகச் சிறந்த நாவலாசிரியராய் அறியப்படும் பியோதர் தாஸ்தாயேவ்ஸ்கி எனும் ருஷ்ய எழுத்தாளரின் 'முட்டாள்' எனும் நாவலின் அடிப்படை.அன்பே அவனுக்கு சிக்கலாகவதுதான் கதை. மிஷ்கின் என்ற பெயர் இலக்கிய உலகில் அறிமுகமானது இப்படித்தான்.

கிகுஜிரோ எனும் ஜப்பானியப் படத்தின் தமிழாக்கமோ, இல்லையோ இது அனைவரும் பார்க்க வேண்டிய படம் என்பதில் மாற்றுக்கருத்துக்கு இடமில்லை.

நமது இயக்குனர் மிஷ்கின் அவர்களும் அப்படிப்பட்ட ஒரு மன நிலை தவறிய மனிதனின் தேடுதலைத் தனது கதைக் களமாக்கியிருக்கின்றார். மன நிலை தவறுதல் என்பதா? குழந்தையைப் போல் மாறிவிட்ட உள்ளமென்பதா? என்பதும் சிந்திக்க வேண்டிய விஷயம். குழந்தைகளாக மாறாவிடில் பரலோக சாம்ராஜ்யம் கிடையாது என்று கூறிய ஏசு கிறிஸ்துவின் சிந்தனையானது, சொர்க்கம் வேறு எங்குமல்ல, உள்ளத்தில் குழந்தைகளாக மாறினால் நம்மால் இங்கு, இந்த உலகிலேயே அடைய முடியும் என்பதுதான். இந்தப் படமும் அத்தகைய உண்மையான குழந்தைக்கும், குழந்தையாக மாறிய நபருக்குமான தேடலுடன் அவர்களுக்கிடையேயான மெல்லிய அன்பின் சித்திரமாய் நம்முன் விரிகின்றது.

தாயைத் தேடும் சிறுவனுக்கும், மன நலக் காப்பகத்திலிருந்து வெளியேறித் தனது தாயைத் தேடும் பாஸ்கர மணிக்குமான நட்போடு, அவர்களின் தேடுதலில் அவர்களுக்குக் கிடைக்கும் முடிவு என்ன என்பதுதான் இதன் கதை.

மண் சார்ந்த படைப்புகளாகட்டும், இயக்குனர்களின் இதயத்திலிருந்து வரும் படைப்பாகட்டும் அதற்கு உயிரோட்டத்துடன் இசையமைக்க இந்த மண்ணின் கலைஞன் இளையராஜாதான் சரியான தேர்வாக அமைவார். அவருக்குத்தான் மௌனத்தையும் இசைக்கத் தெரியும். சிறந்த மண் சார்ந்த படைப்புகளத் தெரிவு செய்யும் இயக்குனர்கள் அனைவருமே இசைக்கு இவரை அணுகுவது இவரின் பலம். இந்தப் படத்திற்கு இவரின் இசையானது கனம் சேர்ப்பதுடன் படத்தினை செறிவு மிக்க கவிதையுமாக்கியுள்ளது. ஒண்ணுக்கொன்னு தொனையிருக்கு உலகத்திலே... அன்பு மட்டுந்தான் அனாதையா.. எனும் பாடல், வெட்டுப்பட்ட பாடல்களையும் கேட்கத் தூண்டும் ஆவலை உருவாக்குகின்றது.

இயற்கையான வரம்பு மீறாத ஒளிப்பதிவு கவிதையாய் காட்சிகளை நகர்த்திச் செல்வதுடன், நம்மை அந்தப் பாதைகளில் பயணம் செய்ய ஏங்கச் செய்வது குறிப்பிடத் தக்கது. வெளி நாடுகளைப் பின்னுக்குத் தள்ளி நம் கண் முன், அருகிலுள்ள இயற்கையினை நம்மை மெய்மறந்து ரசிக்க வைத்த ஒளிப்பதிவாளர் படத்தின் இன்னுமொரு துணை.

நல்ல முயற்சி... நமக்குத் தந்த ஒரு சிறந்த சினிமா....

புதன், செப்டம்பர் 22, 2010

வேண்டும் வகுப்புவாரி ஒதுக்கீடு - இட ஒதுக்கீட்டுக்குச் சவால் விடும் பார்பனீயத்திற்கு அதுதான் மாற்றாக அமையும்.

ஆரியம் இன்னும் தங்கள் இன உணர்வை மறைக்காமல் தங்கள் ஜாதியினைத் தாங்கிப் பிடிக்க எத்தனிப்பதனை 22.09.2010 டெக்கான் க்ரானிகிள் நாள்தழில் வெளிவந்த செய்தியின் மூலம் வெளிப்படையாக நாம் அறிய இயலும். 
  1. இது வரையில் இவர்கள் இட ஒதுக்கீட்டை எதிர்த்து தகுதி , திறமை என்ற வாதத்தில் தங்கள் இனத்தை வளர்த்தனர்.
  2. பிற்படுத்தப்பட்டோர் இட ஒதுக்கீட்டினை மறைமுகமாக நடை பெறாமல் செய்ய ஆட்சேர்க்கையையே தடை செய்து ஆணை பிறப்பிக்க வழி செய்தனர்.
  3. இன்று அதனை அதாவது நடை பெறவே இல்லாத இட ஒதுக்கீட்டினை பத்தாண்டுகள் ஆகி விட்டதனால் மறு பரிசீலனை செய்ய வேண்டும் என்று எகத்தாளம் செய்கின்றனர்.
  4. ஜாதி வாரி இட ஒதுக்கீட்டை முழு மூச்சுடன் எதிர்த்துக் கூக்குரலிட்டனர்.
  5. சிறு பான்மைச் சமூகத்திற்கான அனைத்து நலத் திட்டங்களையும் எதிர்த்து மாய்மாலம் செய்தனர்.
  6. ஜாதி வாரி மக்கள் தொகைக் கணக்கெடுப்பை தங்கள் இன அதிகாரிகள் தடுத்ததுடன், இன்றும் அதனை மக்கள் தொகைக் கணக்கெடுப்புடன் நடத்தினால் பத்து வருடங்களுக்கொரு முறை அதனை நடைமுறைப் படுத்த வேண்டும் என்பதால் அதனை தனியாக நடத்த அதாவது ஜாதி வாரியாகக் கணக்கெடுப்பு படந்தாலும் அதனால் யார் சமூக வளர்ச்சி பெற்றுள்ளனர் என்பதனை அறிய முடியாதவாறு செய்துள்ளனர்.

இதனையெல்லாம் செய்து விட்டு இன்று வெட்கமற்று ,

ஜாதி வாரியான கணக்கீடு வேண்டும் என்கின்றனர் , ஏதடா பரவாயில்லையென்று எண்ணிப்பார்த்தால் தங்களின் எண்ணிக்கை குறைவாயிருப்பதால் தங்களை "சிறு பான்மைச் சமுதாயமாக அறிவிக்க வேண்டுமாம், அதாவது தங்கள் இனத்தில் 30 % பேர் வறுமையில் வாடுகின்றார்களாம்!!." 

எப்படியிருக்கின்றது பாருங்கள் ஆரியத்தின் அடாவடி, அதாவது திராவிடர்கள் பெரும்பான்மையினமாம் அதற்கு இட ஒதுக்கீடு தேவையில்லை என்றும் ஓர் நாள் வாதாடுவார்கள். ' இன்று வரை திராவிடர்களை ' நாமெல்லோரும் இந்துக்கள்' என்று மூளைச் சலவை செய்தவர்கள் இன்று தங்கள் இனத்திற்கு மத வழியாக அன்றி 'சிறுபான்மை இனம்' எனும் வாதத்தினை வைத்து இட ஒதுக்கீட்டுக்கு கோரிக்கை விடுகின்றனர். இன்று 'தகுதி, திறமை' இவையெல்லாம் தேவையில்லை. 

இவர்களின் பின்னால் இந்துக்கள் என்று சென்ற நமதருமைச் திராவிடச் சகோதரர்கள் இது பற்றி எந்தவித விழிப்புணர்வுமின்றி இன்றும் அவர்களை நம்பலாம். இதுதான் காலக் கொடுமை. வெட்டுபவனை ஆடு நம்புவதுதான் இயல்பு.

திராவிட இனமானது 70 % வறுமையில் வாடுகின்றது. இவர்களின் கூற்றுப்படி பார்த்தால் பெரும்பான்மை இனமானது வாழ்விழந்தால் கூடப் பரவாயில்லையாம், இவர்களில் சிரமப்படும் 30 % பேர் நன்கு வாழ வேண்டும்.

பெரும்பான்மை இனங்களின் ஆழ்ந்த உறக்கம் இவர்களுக்குக் கொண்டாட்டம், மாவிலும் கொள்ளை, பணியாரத்திலும் கொள்ளை. இறைவன் பெயரால் எல்லோருக்கும் மொட்டையடிக்கும் ஆரியத்தை திராவிடம் வீழ்த்த வேண்டுமானால் முதலில் பக்தி ஒழிய வேண்டும்.

இவர்கள் உண்மையிலேயே இட ஒதுக்கீட்டை விரும்பினால் அய்யா அவர்கள் சொன்ன வகுப்பு வாரி இட ஒதுக்கீட்டை ஒத்துக் கொள்ளட்டும். அதுதான் உண்மையான தீர்வாகயிருக்க முடியும்.

புதன், செப்டம்பர் 01, 2010

இலக்கியம்பட்டியும் இந்திய அரசியலும்

எரிக்கப்பட்ட மாணவிகளும் எரியாத நியாயங்களும் - தூக்குத் தண்டனை தவறுதான் என்றாலும் இந்த வழக்கிற்கு இது தேவையானதுதான்...

சம்பவம் நடந்த இடத்தில் இல்லாத நமது நெஞ்சமெல்லாம் பதற வைக்கும் பேருந்து எரிப்பு வழக்கு. தலையில் கை வைத்துக் கொண்டு 'கையறு நிலையில்' செய்வதறியாது திகைக்கும் மாணவர்கள். மாணவ, மாணவிகளை உள்ளே பத்திரமாய் இருக்கச் செய்து விட்டு அந்தக் காட்டு மிராண்டிக் கும்பலிடம் மன்றாடிய பேராசியைகள். இரண்டாவதாய் வந்த பல்கலைக் கழகப் பேருந்திலிருந்து வந்து உள்ளே சிக்கியவர்களுக்காய் கண்ணாடியை உடைக்கப் போராடும் மாணவர்கள். கண்ணிமைக்கும் நேரத்தில் கருகிய மலராத மொட்டுகளாய் அந்த மாணவிகள். இதயமுள்ளோர் நெஞ்சிலெல்லாம் நெருப்பாய்க் கனன்று கொண்டிருந்த கேள்விகள். நாகரீகமுள்ள சமுதாயம் நாணித் தலைகுனிய வேண்டிய வெட்கக் கேடான செயலுக்கு மேலும் மேலும் மேல் முறையீடுகள். தனியொரு மனிதனாய் தன் மகளின் இறப்புக்கு நீதி கோரி சர்வ வல்லமை பொருந்திய ஆட்சியாளர்களை எதிர்த்து நீதிமன்றப் படிக்கட்டுகள் ஏறிய கோகிலவாணியின் அன்புத் தந்தை வீராச்சாமியின் முயற்சிக்குக் கிடைத்த வெற்றி.


ஆம், இறுதியாக உச்ச நீதிமன்றம், சேலம் குற்றவியல் நீதிமன்ற அன்றைய நீதிபதி திரு கிருஷ்ணராஜா அவர்கள் கொடுத்த தீர்ப்பை உறுதி செய்து குற்றவாளிகளின் மேல்முறையீட்டு மனுவைத் தள்ளுபடி செய்து தீர்ப்பளித்தது குறிப்பிடத்தக்கது. ஒரு பாவமும் அறியாத, கவலையென்பதறியாத வாழ்வின் வாயிலில் நின்ற சின்னஞ் சிறு குழந்தைகளை குரூரமாக எரித்தவர்களுக்கு இந்தத் தண்டனை தேவைதான். ஆட்சியாளர்களின் மனதில் இடம்பிடித்து தங்கள் அரசியல் நுழைவு அல்லது உயர்வுக்கென ஆரம்பித்த சிலர் குமபல் மனோபாவத்தில் தாங்களாக வரித்துக் கொண்ட ஆணவம்தான், தங்களை யாராலும் ஒன்றும் செய்து விட இயலாது எனும் எண்ணம்தான் இந்த மூன்று மலர்களின் மரணத்தின் காரணம். ' அல்லற்பட்டு ஆற்றாது அழுத கண்ணீருக்கான ஆற்றல் சில சமயங்கலிள் அதிகம்தான்.
 
 
ஆட்சி மாறியதும் கிருஷ்ணகிரியில் நடைபெற்ற இந்த விசாரணையின் தடம் மாறிய பொழுதில் விபரீதத்தை உணர்ந்த கோகிலவாணியின் தந்தை வீராச்சாமி, சென்னை உயர் நீதிமன்றத்தை நாடி விசாரணை வேறு இடத்தில் நடந்திட வழி செய்ததுடன் உயர் நீதிமன்றத்தாலேயே விசாரணை அதிகாரியை நியமிக்க வழிவகை செய்ததால்தான் விசாரணையானது ஒழுங்காக நடந்திட இயன்றது. கண்ணீர் மல்க அன்று சாட்சியம் சொன்ன பேராசிரியைகள் மற்றும் சாட்சியங்கள், சக மாணவ்ர்கள் தங்கள் வாழ் நாளெல்லாம் மறக்க இயலாத அந்த்க் கோரச் சம்பவம் விதைத்த வடு ஆற இன்னும் பல காலம் பிடிக்கலாம்

ஞாயிறு, ஆகஸ்ட் 22, 2010

குரு பூர்ணிமாவும், குலக் கல்வியும்

குரு குலம் திருமப வருமா ?... குலக் கல்வி உயிர் பெறுமா? ...

ஆசிரியர் தினத்தை குரு பூர்ணிமாவுக்கு மாற்ற முனையும் அடிப்படைவாதிகள்..

குருவுக்கு மரியாதை செய்வதென்பது தவறாகாது, ஏனென்றால் அவர் நமது வாழ்வின் முன்னேற்றத்தை உறுதி செய்கின்றவராவார். ஒன்றுமறியாத குழந்தைப் பருவத்திலிருந்து நமது வாழ்வின் பாதையைச் செப்பனிடுபவர் குரு. இதில் முக்கியமாகக் கவனிக்க வேண்டியது என்னவென்றால் இந்த குரு என்பதிலும் நமக்கு சிறு பருவத்தில் எண்ணும் எழுத்துமறிவித்து நமது மனத்தை கல்வி நோக்கித் திருப்பிய குருவை வணங்குவதில் தவறில்லை.ஆனால் அதை மதத்துடன் தொடர்பு படுத்தி வியாசர் ( வேத வியாசர்) எனும் முனிவரை அதாவது வேதங்களை நமக்குத் தந்தவர் என்ற வகையில் அவரை நினைவு கூறும் நாளாகக் கொண்டாடுவதையும், அதனை அரசின் சிந்தனைப் போக்குகளைத் தீர்மானிக்கக் கூடிய குழுவிலுள்ள ( தேசீய வளர்ச்சிக்கான ஆலோசனைக் குழு) சிலர் வெளிப்படையாக பங்கேற்பதென்பது, அந்த வேதங்கள் யாருக்கானவை என்ற நிலையில், அது மக்களிடையேயான பிரிவுகளை (வர்ணாசிரப் பிரிவுகளை நியாயப்படுத்தும்) உறுதிப்படுத்தக் கூடியது எனும் நிலையில், எப்படி நியாயமான செயலாக இருக்க முடியும் என்பதுதான் நம்முன் எழும் கேள்வி.

இந்திய அரசு எந்த மதத்தையும் சாராத அரசு என்பது அரசியலமைப்புச் சட்டத்தில் உறுதி செய்யப்பட்டுள்ளது. மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசானது மத்தியிலும் மாநிலத்திலும் ஆட்சி செய்து வருகின்றது. அதற்கான அடிப்படைச் சட்ட நெறி முறைகள் உள்ளன.இத்தகைய எந்த மதத்தையும் சாராத அரசானது ஆட்சிக்கு வந்து 63 ஆண்டுகளாகின்றது. அரசியலமைப்புச் சட்டம் நடைமுறைக்கு வந்து 60 ஆண்டுகளாகின்றது. சாதி, மத பேதம் ஒழிய வேண்டும் என்று குரல் கொடுக்கும் அச்சு ஊடகங்களும், அதி மேதாவி முற்பட்ட வர்க்கமும் சமீப காலமாக மத ரீதியான பழக்கங்களை உயர்த்திப் பிடிப்பது உள்ளங்கை நெல்லிக்கனியாக வெளிப்படையாக தெரிகின்றது.

மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட மக்களுக்கான அரசானது ஆசிரியராய்த் தனது வாழ்வினைத் துவங்கி சுதந்திர இந்தியாவின் முதற் குடிமகனாய் உயர்ந்த டாக்டர் சர்வ பள்ளி ராதாகிருஷ்ணன் அவர்களின் பிறந்த நாளை ஆசிரியர் தினமாக அறிவித்திருப்பதையும், அந்த நாளில் இந்த நாட்டில் சிறந்த ஆசிரியர்களுக்கு நல்லாசிரியர் விருது வழங்கிக் கொண்டாடி வருவதை இந்த உயர் வகுப்பும், ஊடகங்களும் மிக நன்றாக அறிந்தவர்கள்தான்.

ஆனால் மனதளவில் இவர்கள் அரசின் ஆசிரியர் தினத்தைப் பற்றிய எந்தவித அக்கறையுமின்றி, தங்கள் மத நம்பிக்கையின் அடிப்படையில், வேதங்களை அதாவது தங்களின் உயர் குடிப் பிறப்பை உறுதிசெய்யும் அடிப்படைத் தத்துவத்தை எழுதிய வேதவியாசரை நினைவு கூறும் வண்ணம் குரு பூர்ணிமாவை கடந்த ஓரிரு வருடங்களாக வெளிப்படையாகக் கொண்டாடி வருகின்றனர். அதை எந்த விதத் தயக்கமோ, வெட்கமோ இன்றி ஊடக உயர்வகுப்பு வெளியிடுவதும் தொடர்ந்து வருகின்றது. இதைவிடக் கொடுமையென்னவென்றால் இந்த மத ரீதியான குரு பூர்ணிமாக்களையும், ஆசிரியர்களுக்கு ஒரு பள்ளியில் மாணவர்கள் பாதபூஜை செய்வதையும் சில பிரபல ஆங்கில நாளிதழ்கள் அவ்வப்பொழுது படத்துடன் செய்தியாக வெளியிட்டு வருவதுதான். பாத பூஜை குறித்து அந்த ஆண்டில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சட்டமன்ற உறுப்பினரும்,சமூக ஆர்வலருமான திரு ரவிக்குமார் அவர்கள் மட்டும்தான் ஆட்சேபணையைத் தெரிவித்திருந்தார்.அடிமைத் தனத்தை எவ்வகையிலாவது நிறுவனமாக்க முயலும் மேல்தட்டு வர்க்கத்தை நாம்தான் உணர்வதுமில்லை, நமது சந்ததிகளை அது குறித்து எச்சரிப்பதுமில்லை. சுயமரியாதையுடன் ஒரு சமுதாயம் அமைவதை அவர்கள் எப்படி அனுமதிப்பார்கள்? தேவைப்படும் நாமே அதனை நாடுவதில்லை எனும் நிலையில் பல படித்தரங்களால் மனிதர்களை சிறுமைப்படுத்திய அவர்களிடம் எப்படி நாம் எதிர்பார்க்க இயலும்.

இன்று தேசிய வளர்ச்சிக்கான ஆலோசனைக் குழு உறுப்பினராக மாண்புமிகு பாரதப் பிரதமரால் தெரிவு செய்யப்பட்டவரும், பாராளுமன்ற மாநிலங்களவை உறுப்பினருமான ஒரு நபர் தான் பொறுப்பு வகிக்கும் பதவியின் மாண்பு பற்றிக் கவலைப்படாததுடன், குறைந்த பட்சம் தான் பொறுப்புகளை ஏற்றுள்ள அரசால் அறிவிக்கப்பட்டுள்ள ஆசிரியர் தினம் பற்றிய கவலை எள்ளளவுமின்றி தன்னால் வளர்த்து விடப்பட்ட தனது நிறுவனத்தை மேலாண்மை செய்துவரும் அதிகாரி அவரைக் குருபூர்ணிமாவன்று சந்தித்து ஆசி பெற்றதை தன்னைப் பெருமைப்படுத்தியதை கௌரவமாக நாளிதழ்களுக்குத் தர இயல்கின்றது.இன்றுவரை இவர் தன்னை ஆசிரியர் தினத்தன்று இவர்கள் சந்தித்தார்கள் என்று கூறியதுண்டா?

நமக்குத் தெரிந்த குரு யாரென்றால் ஆசிரியர்கள்தான். அவர்களுக்குத் தெரிந்த குரு ஆசிரியர் அல்ல என்பதிலிருந்து நாம் அவர்கள் குரு என்று யாரைச் சொல்வார்கள் என்பதையும் இன்னும் அறிந்து கொள்ளாமலிருப்பதுதான் நம் அறியாமை.

இது சாதாரண நிகழ்வாக, கவனிக்கப்படத் தேவையில்லாத்தாக, தேவையற்ற சர்ச்சையை உருவாக்குவதாகப் பலருக்குத் தெரியலாம். ஆனால் உண்மையில் குருகுலம் திரும்பவர வேண்டும் அதுவும் அரசின் பணத்தில் தங்கள் குழந்தைகள் மட்டும் பயிலும் வண்ணம் வர வேண்டும் என்பதின் வெளிப்பாடுதான் இது போன்ற செயல்கள் என்பது நமக்குக் காலம் கடந்த பின் தான் புரியும். இவர் போன்றவர்கள் தேசிய அரசின் கொள்கை முடிவுகளை தெரிவு செய்யும் இடத்தில் இருக்கின்றனர் என்பதையும் நாம் மனதிலிறுத்திப் பார்த்தால் நமது அச்சத்தின் காரணம் புரியும்.இவர் போன்றவர்கள் எப்படி அனைவருக்குமான வளர்ச்சியை நிர்ணயிக்க உள்ள ஆலோசனைக் குழுவில் எப்படிப்பட்ட ஆலோசனைகளைத் தருவர் என்பதுதான் கேள்வி. தங்கள் மனதிலுள்ள தங்கள் இனத்தை வளர்க்கக் கூடிய ஆலோசனைகளை நாடு வளரத் தேவையான ஆலோசனைகளாக அள்ளி வழங்குவர், அதையும் நமது முற்பட்ட இன நாடாளுமன்ற உறுப்பினர்கள் சரியென்று வாதிடுவர்.முளையிலே கிள்ளி எறிய வேண்டிய இது போன்ற கள்ளிகளை நாமும் அழகுக்காக வளர்த்துப் பின் நமது சந்ததி இன்று ஜாதி வாரிக் கணக்கெடுப்புக்காக நாம் கோடரி எடுக்கும் சூழ்னிலையிலிருப்பது போல் அவர்களும் இருக்க வேண்டிய நிலை வரலாம்.

குருகுலம் வரலாம், அது சேரன் மாதேவி குருகுலம் போல் இருக்கலாம், அதனை தொண்டு நிறுவனமாக நடத்தி நமது வரிப்பணத்தையும் வாங்கிக் கொள்ளலாம், நமது மக்களுக்கு கல்வியை மறுப்பதாகயிருக்கலாம் அல்லது போனால் போகின்றதென்று நமக்கு தனிக்கல்வியும், தனிப்பந்தியும் கிடைக்கலாம்,அதற்கு நமது தேசிய வளர்ச்சி ஆலோசனைக் குழுவானது பரிந்துரையும் செய்யலாம். ஏனென்றால் அரசின் நலத் திட்டங்கள் மக்களுக்குச் சரியாகச் செல்லவில்லை அதற்கான ஆலோசனையை வழங்குங்கள் என்று இந்தக் குழுவைத்தான் இது போன்ற நயவஞ்சக நிலைப்பாடுகள் பற்றி அறியாத ராகுல் காந்தி அவர்கள் கேட்டுக் கொண்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.பெரியாரா இருக்கின்றார் இவற்றை தொடர்ந்து நமக்கெல்லாம் வெளிச்சம் போட்டுக் காட்ட.. ஒவ்வொரு அசைவும் நமது உரிமையின் மீதான அத்து மீறல் என்பதை நம்மக்கள் உணரத் தலைப்படுவதோடு அதனை குறைந்தபட்சம் அரசியல் ரீதியாகக் களைய முன்வரவேண்டும்.

ஞாயிறு, ஜூலை 18, 2010

சாதிவாரி மக்கள் தொகைக் கணக்கெடுப்பும் வக்கிரமான உயர் ஜாதியினரின் கோரமான முகங்களும்

ஜாதிவாரிக் கணக்கெடுப்புக்கான உண்மையான எதிர்ப்புகள் ஏன் என்பது தற்சமயம் வெளி வரத் துவங்கியுள்ளது. இரண்டு விதமான சிந்தனைகளை எதிர்ப்பாளர்கள் தோற்றுவிக்க முயல்கின்றனர்.

முதலாவதாக இந்து மதத்தினைப் பிளவு படுத்த முயல்வதாக கூக்குரலிடும் மதவாதிகள் அல்லது மதத்தின் போர்வையில் தங்களின் மத்திய அரசின் மீதான பிடிப்பினை உறுதி செய்ய முற்படும் மேல்தட்டு வர்க்கம்.

இரண்டாவதாக ஜாதி வாரியான கணக்கெடுப்பு நாட்டை ஜாதிவாரியான போராட்டங்களை நோக்கி நகர்த்திவிடும் எனக் கூறும் அதே மேல்தட்டு வர்ணாசிரமச் சிந்தனையாளர்கள்.

நாட்டின் வளத்தை முழுமையாகத் தங்கள் இனத்தை வளர்க்க உபயோகப் படுத்திக் கொண்ட நபர்கள் இன்று இத்தகைய வாதங்களின் மூலமும் அரசின் இந்தக் கணக்கெடுப்பு குறித்து முடிவெடுக்கும் தகுதிவாய்ந்த பதவிகளில் ஒட்டிக் கொண்டுள்ள தங்கள் ஆதரவாளர்களின் மூலமாக இந்தக் கணக்கெடுப்பை தடுக்கச் செய்யும் சூழ்ச்சிகள் எண்ணிலடங்கா??

இன்று ஆடு, மாடு , கோழி, சிறுத்தை என ஊர்வன, நடப்பன, பறப்பன என ஆறறிவு இல்லாத அனைத்தையும் ஏதாவதொரு வகையில் கணக்கெடுக்க அரசு ஆவண செய்கின்றது. அதாவது அதில் அருகிவரும் இனங்களைக் கண்டு பல்லுயிர்ப் பெருக்கத்தில் அவற்றின் இனம் வளர்ச்சியடைய என்ன செய்ய வேண்டும் என்பதை ஆராய்ந்து அதன்படி தனது கொள்கைகளை வடிவமைக்க முடிவு செய்கின்றது.

ஆனால் ஆறறிவு படைத்த மனித இனத்தில் மட்டும் தனது வளர்ச்சித் திட்டங்கள் சரியான விதத்தில் அவர்களைச் சென்றடைந்துள்ளதா என கணக்கெடுக்க அரசு தயங்குகின்றது, தடுமாறுகின்றது. இட ஒதுக்கீடு என்று ஒரு குறிப்பிட்ட வகுப்பிற்கு வழங்குவது அந்த வகுப்பின் வளர்ச்சிக்காக என்பதாகுமானால் அந்த வளர்ச்சி அந்த வகுப்பினரைச் சென்றடைந்துள்ளதா என்பதை உறுதி செய்ய வேண்டும் என்பதுதானே உண்மையான அக்கறையாகயிருக்க முடியும். மக்கள் தொகைக் கணக்கெடுப்பில் மக்களின் வளர்ச்சியை அறிவதற்காக அரசால் அவர்களின் இல்லத்தில் கணினி, தொலைபேசி, இணையப் பயன்பாடு, ஆடு, மாடு, கோழி வரை அனைத்தையும் கணக்கெடுக்க முடியும் போதில் இந்த பிற்படுத்தப்பட்ட,தாழ்த்தப்பட்ட ஏன் உயர் வகுப்பின மக்களையும் அவர்கள் இந்த நாட்டின் வளத்தில் / வளர்ச்சியில் எந்த அளவிலான பயன்பாடுகளைப் பெற முடிந்துள்ளது என்பதை கணக்கெடுக்க ஏன் மறுக்கின்றது?

உண்மையிலேயே எல்லோருக்குமான அரசாக இருக்கும் பட்சத்தில், சமூக நீதியானது அனைவருக்கும் கிடைத்து விட்டது என்பது உண்மை என எண்ணும் அரசாக இருக்கும் பட்சத்தில் இந்த மத்திய மாநில அரசுகள் தங்களின் துறைகளில் பணிபுரியும் ஊழியர்கள் குறித்தும் அவர்களில் முடிவெடுக்கும் அதிகாரமுள்ள பதவிகளில் உள்ள அதிகாரிகளின் ஜாதி அல்லது வகுப்பு பற்றிய ஒரு வெள்ளை அறிக்கையை வெளியிட இயலுமல்லவா?? உண்மையிலேயே பிற்படுத்தப்பட்ட மக்களின் பிரதிநிதித்துவமானது சரியான விகிதாச்சாரத்தில் இருக்கும்பட்சத்தில் அது இத்தகைய இட ஒதுக்கீட்டு ஆதரவாளர்களின் வாதத்தை தவிடு பொடியாக்கி விடுமல்லவா??

அப்படியில்லாத பட்சத்தில் அரசு உள்ளங்கை நெல்லிக்கனியாகத் தனக்குத் தெரியும் உண்மைகளை மறைப்பதாகத்தானே எண்ண முடியும். இதற்கு அரசு அதிகாரத்தில் உள்ள மேன்மக்கள்தான் காரணம் என்பதும் அதை அரசானது மீற இயலாமலுள்ளது என்பதும்தானே காரணமாக இருக்க முடியும்.

நாட்டின் வளமானது ஏதாவது ஓரிடத்தில் குவியாமல் அனைத்துத் தரப்பினருக்கும் சென்றடைய வேண்டும் என்பதுதான் மக்களாட்சியின் முக்கியக் கூறு. இந்த வேலை வாய்ப்பு,கல்வி போன்றவை அனைவரையும் சென்றடைந்தால் மட்டுமே அரசின் அனைத்துத் தரப்பினருக்குமான வளர்ச்சி என்ற கொள்கையானது சாத்தியமாகும்.அதுதானே நாம் தெருவெங்கும் முழங்கும் அனைவருக்குமான வளர்ச்சியாக இருக்கும். அத்தகைய சமச்சீரான வளர்ச்சியை அனைத்துத் தேசிய இனங்களும் அடையவில்லை என்பதன் காரணமாகத்தான் நாம் இட ஒதுக்கீடு மற்றும் பல சமூக நலத் திட்டங்களைச் செயல் படுத்துகின்றோம். எனவே நமது சமூக நலத் திட்டங்களின் பலனானது குறிப்பிட்ட இலக்கினை அடைந்து அனைவரின் முன்னேற்றத்திற்கும் உதவியுள்ளதா என்பதை எப்படி அளவிட முடியும்? பிற்படுத்தப்பட்டவர்களிலும் இட ஒதுக்கீட்டை அனுபவிப்பவர்களே அனுபவிப்பதை எப்படி நாம் சமூக நீதி என்று கூற இயலும். அதிலும் அதன் பலனையடையாத முன்னேற்றமடையாதவர்களைச் சென்றடைந்தால்தான் சமூக நீதி வென்றது என்று கூற இயலும். அதற்காகவேனும் இந்தச் சாதி வாரிக் கணக்கெடுப்பை நடத்த வேண்டும்.


இன்று நமது 2011 ஆம் ஆண்டுக்கான மக்கள் தொகைக்கணக்கெடுப்பில் வீட்டுப் பயன்பாட்டுப் பொருட்கள், வளர்ப்புப் பிராணிகள், இணையப் பயன்பாடு போன்றவற்றைக் கணக்கிட முடிவு செய்துள்ளோம். அதனையெல்லாம் கேட்டுப் பெற முடியும் கணக்காளர்களால் இந்த மக்களின் சாதியைக் கேட்டுப் பெற இயலாது என்று கூறுபவர் சிலர், சாதி தானாகக் கூறும் போது தவறாகக் கூறப்படும் வாய்ப்புள்ளது என்பவர் சிலர், தானாக முன்வந்து அளிக்கும் தகவல்களாதலால் அதில் தவறுகள் நிகழும் என்பவர் சிலர்.

இவையனைத்தையும் உண்மை என்று நாம் ஒத்துக் கொள்வோமேயானால் இந்த வாதங்களின் மூலம் நமது கணக்கெடுப்பை நாமே தவறு என்று ஒத்துக் கொள்வ்தாகவே முடியும். அப்படியென்றால் இத்தகைய தவறுகளையுடைய புள்ளி விபரங்களை வைத்துத்தான் நமது அரசு நடைபெறுகின்றது என்பதும், அதற்கு எதற்காக இத்தனை கோடிகளை வாரி இறைக்க வேண்டும் என்பதும் ஆழ்ந்து சிந்திக்க வேண்டியவையாகத் தோன்றும்.

நல்ல வேளையாக இவர்களின் உண்மையான பயம் சமீபகாலமாக வெளிவரத் துவங்கி விட்டது. அதாவது 3 மற்றும் 4.07.2010 ஆகிய தேதிகளில் பத்திரிக்கைச் செய்திகளின் விபரம் அதை தெளிவு படுத்தியுள்ளது. அதாவது ஜாதிவாரியாகக் கணக்கெடுத்தால் தற்பொழுது உச்ச நீதிமன்றம் கூறியுள்ள அதிகப்டச இட ஒதுக்கீட்டு எண்ணிக்கையான 50 சதவிகிதம் கேள்விக்குள்ளாக்கப்படுமாம். மேலும் சரியான முறையில் இட ஒதுக்கீட்டு பலன்களைப் பெறாத சமூகங்கள் உள் ஒதுக்கீடு கோரும் அபாயம் வந்து விடும் என்பதாகவும் தெளிவு படுத்தப்பட்டுள்ளது.

உண்மையில் ஜாதி வாரியான இட ஒதுக்கீட்டுக்கு எதிராக இந்த மேல்தட்டு மக்கள் செயல் படுவது இந்த இரண்டு காரணங்களுக்காகத்தான். அதை பட்டவர்த்தனமாகக் கூற இயலாமல் தங்களால் ஆன தடைகளையிட முயன்று வருகின்றனர். அரசியல் கட்சிகளைப் பொறுத்தமட்டில் இந்தக் கணக்கெடுப்பானது அவர்களின் அரசியலை முழுமையாக ஜாதீயமாக்கிவிடும் என்பதுதான்.

இது கூட ஒன்றும் புதிதான சமாச்சாரமல்ல. விடுதலை பெற்ற பின் நடந்த அனைத்துத் தேர்தல்களிலும் அந்தந்தத் தொகுதியின் வாக்காளர்களின் சாதிதான் வேட்பாளர்களின் தேர்வில் முன்னின்றது. இன்று வரை அதுதான் தொடர்கதை. இது மிகப் பிரபலமான விரல் விட்டு எண்ணக் கூடிய சிலருக்குப் பொருந்தாமற் போகலாம். பெரும்பான்மைக்கு இதுதான் பொருந்தும்.

தீர்த்தகிரிக் கவுண்டராகட்டும் முன்னாள் வேளாண் அமைச்சர் சி சுப்பிரமண்யமாகட்டும் பழனி நாடாளுமன்றத் தொகுதியின் வேட்பாளரானது அவர்களின் சாதி வாக்குகளால்தானேயொழிய வேறெதனால் ? இதில் அரசியல் கட்சிகளை விடவும் பாதிக்கப்படப் போவது மேல்தட்டு அரசியல்வாதிகளும் அவர்கள் இன அதிகாரிகளும்தான். அதனால்தான் அவர்கள் இதனை தங்கள் ஊடக நண்பர்களுடன் இணைந்து எதிர்த்து வருவதுடன் ஏதோ பலமான எதிர்ப்பு இருப்பதாகவும் காட்ட முயற்சி செய்கின்றனர்.

இன்னுமொரு விநோதமாக இவர்கள் இந்த கணக்கெடுப்பானது இட ஒதுக்கீட்டு அளவில் பெரும் மாறுதலை ஏற்படுத்தும் நிலை உருவாகும் என அச்சப்படுவது இந்த பத்திரிக்கைகளின் செய்திகளில் தெரிய வரும் மற்றொரு உண்மை. ஆனாலும், இவர்களாகவே உச்ச நீதிமன்ற கட்டுப்பாடான உயர்ந்த பட்ச இட ஒதுக்கீட்டு அளவான 50 சதவிகிதம் என்பதை அரசால் பாராளுமன்றத்தின் மூலம் மாறுதல் செய்ய முடியாது என்று இப்பொழுதே தீர்ப்பு வழங்க முயற்சி செய்வதும் 03.07.2010 அன்றைய டைம்ஸ் ஆப் இந்தியா நாளிதழ் பார்த்தவர்களுக்குத் தெரியும். இதிலிருந்து இந்தப் நாளிதழ்களும், முடிவெடுக்கும் திறன் படைத்தோரும் அவர்களின் பிரச்சனைக்கு அவர்களாகவே தீர்வு அல்லது தீர்ப்பு எழுத முற்படுவது தெரியும். இந்த உச்ச பட்ச இட ஒதுக்கீட்டு அளவை நிர்ணயிக்கும் அதிகாரம் உச்ச நீதிமன்றத்திற்கு எந்தச் சட்டத்தில் வரையறை செய்யப்பட்டுள்ளது. அரசியலமைப்புச் சட்டத்தால் உறுதி செய்யப்படாத ஒரு முடிவை இவர்களாகவே உறுதி செய்வதும் அதை ஒரு பொதுக் கருத்தாக்கி நாளிதழ்கள் வழியே நமக்கு மூளைச் சலவை செய்வதும் இன்று வெட்ட வெளிச்சமாகின்றது.

இது கீற்று வலைத்தளத்தில் முதன் முதலாக வெளியிடப்பட்டது.

மக்களின் வரிப்பணத்தை தொண்டு நிறுவனங்களுக்குத் திசைதிருப்பும் புதுமையான தந்திரத்தில் பார்ப்பனீயம்.


ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசின் முக்கிய சமூகம் சார்ந்த செயல்திட்டங்களை கமிஷன் அடிப்படையில் தொண்டு நிறுவனங்களிடம் அளித்து செயல்படுத்துவது பற்றி பரிசீலிக்குமாறு அகில இந்திய காங்கிரசின் பொதுச் செயலாளர் ராகுல் காந்தி அவர்கள் புதிதாக அமைக்கப்பட்டுள்ள தேசீய ஆலோசனைக் குழுவைக் கேட்டுக் கொண்டுள்ளார். இதற்கான காரணம் என்னவென்றால் மக்களுக்கான நலத் திட்டங்களுக்கான ஒதுக்க்கீட்டில் குறிப்பிட்ட பயனாளிகளை சென்றடையும் பணப்பயனானது 1 ரூபாயில் கிட்டத்தட்ட 15 காசுதான் என்பதாக உள்ளது. டெக்கான் க்ரானிகிள் - 21/06/2010 முதற்பக்கச் செய்தி.

இந்தச் செய்தியைப் பார்த்தால் இதில் என்ன தவறு, அரசின் நலத் திட்டங்களை மக்களிடம் முழுமையாகக் கொண்டு செல்ல தனியார் நிறுவனங்களைப் பயன் படுத்திக் கொள்வதில் தவறில்லை என நமது படித்த மக்கள் அனைவரும் நம்பும் சாத்தியம் அதிகம். உண்மை என்னவாக இருக்கும் என்பதை நாம் தொலை நோக்குப் பார்வையுடன் அணுகாவிட்டால் நமது தலையில் நம்மை வைத்தே மிளகாய் அரைக்கும் தந்திரம்தாம் இந்த முயற்சி.

21.06.2010 அன்றைய தினமலர் நாளிதழ் பார்த்தவர்கள் அதில் கடம் வாசிப்பில் போட்ட செய்தியைப் படித்துப் பார்த்தால் இதன் விபரீதம் புரியும். அந்தச் செய்தியை தினமலரில் ஏன் வெளியிட்டார்கள் என்பதை எண்ணிப் பார்த்தால் அது தினமலர் சாராத இனம் என்பதால்தான் என்பதை தனிக் கட்டுரையாக எழுதலாம். அதாவது குழந்தைத் தொழிலாளர் முறையைத் தடுக்க முயலும் தனியார் தொண்டு நிறுவனமானது குழந்தைத் தொழிலாளர்களுக்கு படிப்பிற்காக பணம் அளித்த நிலையில் அந்தக் குழந்தைகள் மேடையை விட்டு இறங்குமுன் அந்தப் பணக்கவரை திரும்பப் பெற்றுக் கொண்டன என்பதுதான் சாராம்சம். இது அந்த மாவட்ட அரசு நலத்திட்ட அதிகாரிகள் முன்னிலையிலேயே நடை பெற்றதாக அந்தச் செய்தி தெரிவிக்கின்றது.

இதுதான் தனியார் தொண்டு நிறுவனங்களின் யோக்கியதை அல்லது லட்சணம். லட்சங்களை விடுத்து கோடிகள் லட்சியமாகி விட்ட பொழுதில் தொண்டு நிறுவனங்களின் லட்சணம் இப்படித்தானேயிருக்கும். இதில் அரசுப் பணத்தில் கொள்ளையடிக்க அரசே வாய்ப்பையேற்படுத்திதர முனைவதுதான் வேதனை. அதையும் இந்திய தேசியக் காங்கிரஸ் கட்சியின் வாரிசான ராகுல்காந்தி புரிந்தோ புரியாமலோ பேசியிருப்பதுதான் வேடிக்கை.

புரிந்தோ புரியாமலோ என்று ஏன் சொல்ல வேண்டியுள்ளது என்றால் அவருக்குள் இந்தச் சிந்தனையை விதைத்தவர்கள் தங்கள் சமூகத்தை அரசுப் பணிகளில் இனிமேல் காப்பாற்ற இயலாமல் போகும். அப்படியொரு நிலையில் நமது இனத்தவர்கள் தேச சேவை மற்றும் தொண்டுள்ளம் என்று பெயரிட்டுக் கொண்டு இனச் சேவையை எந்தவித இட ஒதுக்கீட்டுச் சிக்கல்களும் இல்லாமல் வழக்கம்போல் தொடரவும், யாரிடமும் கையேந்தாமல், வரவு செலவுகளுக்கு அஞ்சாமல் இருக்கவும் அரசின் நலத் திட்ட ஒதுக்கீடுகளை ஒதுக்க முனையும் தந்திரத்தால்தான்.

இந்த தேசிய ஆலோசனைக் குழுவில் இடம் பெற்றுள்ள நபர்கள் யார்? அவர்களின் இந்த பன்முகப்பட்ட சமுதாயத்தை பிரதிபலிக்கக் கூடியவர்களாயிருக்கும் சாத்தியமுள்ளதா? பலதரப்பட்ட சமூகப் பிரிவுகளின் பிரச்சனைகளை உணர்ந்தவர்களாகவோ, அவற்றின் தாக்கங்களை உள் வாங்கியவர்களா? என்பது போன்ற அடிப்படையான கூறுகள் பற்றி எதுவும் தெரியாத பட்சத்தில் இது குறித்து சமூக நீதிக்கான இயக்கங்களும் அரசியல் வாதிகளும் விழிப்புடனிருக்க வேண்டும்.

அப்படியிருப்பவர்களிலும் தங்கள் சமூகம் இதனால் எவ்விதம் பாதிப்படையும் என்பதை உணர்வதுடன் அதற்காக போராடக் கூடியவர்களாயிருக்க வேண்டும். மனுதர்ம வாதிகளிடம் கொள்கையைச் சரணடைய விடும் மனம் படைத்தவர்களைத்தான் மனுதர்மம் வளர்த்து விடும், நல்லவர் என்று தனது ஊடகங்கள் மூலம் பரப்பும் அதன் தந்திரத்தில் மயங்குபவர்களல்லாத நம்மவர்களை எந்தெந்த முறையில் அலைக்கழிக்க முடியுமோ அந்தந்த முறையில் அலைக்கழிக்கும்.

மக்களுக்காய் உழைக்கும் பொழுதில் ஏற்படும் சலிப்புக்கும் வெறுப்புக்கும் நம்மவர்கள் ஆட்படாமல் இது போன்ற விஷயங்களில் விழிப்புடன் செயல் பட வேண்டும். அப்படியில்லையென்றால் எல்லாக் கொள்ளைப் புறங்கள் வழியாகவும் எதேனும் ஒரு பிரச்சனையுடன் நமது சமூக முன்னேற்றத்தை தடுக்கவும் அல்லது முடிந்தால் அழிக்கவும் ச்மூக நீதியின் எதிராளிகள் விழிப்புடன் உள்ளனர் என்பதை நாம் மறந்து விடக் கூடாது.

- முதன் முதலில் கீற்று வலைத்தளத்தில் வெளியிடப்பட்டது

சனி, ஜூன் 05, 2010


சாதிவாரிக் கணக்கெடுப்பும் - நமது மாண்புமிகு அரசியல்வாதிகளும்........

இந்திய அரசு மக்கள் தொகைக் கணக்கெடுப்பில் சாதிவாரி மக்கள் தொகையை கணக்கிடுவதா? வேண்டாமா ? என்பதற்கு பலதரப்பட்ட விளக்கங்களை மேட்டுக்குடி அறிஞர் பெருமக்களும், மேன்மை தங்கிய சில பத்திரிக்கைகளும், அழையா விருந்தாளிகளாக பிக் பி என செல்லமாக அழைக்கப்படும் அமிதாப் பச்சன் போன்றவர்களும் தங்கள் திருவாய் மலர்ந்தருளியுள்ளனர்.

அரசின் நலத் திட்ட்டங்கள், இட ஒதுக்கீடு போன்ற மக்களை சமூக ரீதியாக சமப்படுத்த அரசு எடுத்திடும் பல்வேறு நடவடிக்கைகள் சரியானபடி திட்டமிடப்படவும் தகுந்த நபர்களைச் சென்றடையவும் வேண்டுமென்றால் இந்த மக்கள் தொகைக் கணக்கெடுப்பில் இந்தத் தகவல்கள் எடுக்கப்படுவதே சரியானதாகயிருக்க முடியும்.உச்ச நீதி மன்றம் பிற்படுத்தப்பட்டோர் இட ஒதுக்கீடு பற்றிய வழக்குகள் வரும் போதெல்லாம் இந்த எண்ணிக்கை பற்றிக் கேட்பதும் மத்திய அரசு வழக்கறிஞர்கள் எப்போதும் அதற்கு 1931 கணக்கெடுப்பைக் காரணம் காட்டுவதும் வாடிக்கையாகிவிட்டது. தேவைப்பட்டால் மத்திய அரசு கணக்கெடுப்பை நடத்த முடிவெடுக்கும் என்று ஒப்புதலும் கொடுத்துள்ளனர். ஆனால் மத்திய அரசின் முடிவெடுக்கும் அதிகார பீடங்களில் இந்தக் கணக்கெடுப்புக்கு எதிராக ஒரு மாபெரும் சதித் திட்டமே நடைபெறுவது கண்கூடாக உள்ளது.இந்த முடிவுகளை எடுக்கக் கூடிய அதிகார மையங்களில் தாங்கள் சார்ந்த சாதியின் மேலாண்மை பறிபோய்விடக் கூடும் என்ற அச்சத்தினாலேயே இதற்கு முட்டுக்கட்டை போட அதிகார வர்க்கம் முயல்கின்றது. அதற்கு வக்காலத்து வாங்கும் நபர்கள் அச்சு ஊடகங்களில் தங்கள் சாதிப் பெயருடன் எழுதிக் கொண்டு சாதிவாரிக் கணக்கீடு இந்தச் சமுதாயத்தை சாதிவாரியாகப் பிரித்துவிடும் என்று கூறுவதுடன் இதற்குத் துணையாக நமது நாட்டின் முன்னோர்கள் இதற்காகவே சாதி வாரிக் கணக்கெடுப்பைத் தவிர்த்தனர் என்று கூறுவதுதான் விந்தையிலும் விந்தையாக உள்ளது. ரெட்டிகளோ, நாயுடுகளோ,அய்யர்களோ,அய்யங்கார்களோ,நாயக்கர்களோ, நாயக் களோ இன்னபிற மூவாயிரம் ஜாதிப் பிரிவினர்களோ தங்கள் வம்சாவழியை பாதுகாக்க அந்தச் சாதிகளிலேயே சம்பந்தம் பண்ணுவதை சரியென்று கூறிக் கொண்டு சாதி வாரிக் கணக்கெடுப்பை மட்டும் எதிர்ப்பது ஒரு கேவலமான மட்டமான தந்திரம்தானேயொழிய உண்மையில் சாதி ஒழிய வேண்டும் என்ற எண்ணத்திலல்ல.சமுதாயம் சாதிகளால் பிரிந்து கிடக்கின்றது என்பதுதான் உண்மை. இந்த அநீதியை சரி செய்யக்கூடிய வல்லமையுள்ள தலைவர்கள் யாரும் இன்று கிடையாது. இது பிற்படுத்தப்பட்டவர்களோ தாழ்த்தப்பட்டவர்களோ தங்கள் மீது திணித்துக் கொண்ட பிரிவல்ல. இந்தச் சமுதாயம் அவர்களை பன்னெடுங்காலமாக பல் வேறு படித்தரங்களில் நிறுத்தி அவமானப்படுத்தியுள்ளது,

தான் வில் வித்தை கற்றுத் தராத ஏகலைவனின் விரலை தனது சிலையைக் குருவாகப் பாவித்து கற்றுக்கொண்ட காரணத்திற்காக அவன் பெரு விரலைக் காணிக்கையாகப் பறித்தது இந்தச் சமுதாயம்தானே.தனது மோட்சத்திற்காகத் தவமியற்றிய சம்பூகனின் தலையை இந்தச் சமுதாயத்தில் தவமியற்றும் உரிமை சூத்திரனுக்கில்லை அதனால்தான் எனது மகன் இறந்து விட்டான் என்று கூறிய அந்தணனின் வாக்கினை ஏற்றுத்தானே தசரத ராஜகுமாரன் கருணையே வடிவான ராமன் கொய்தான். நந்தனை உள்ளே அழைக்க தெய்வத்தாலும் இயலவில்லை என்பதால்தானே அந்த ஆற்றலற்ற தெய்வமானது நந்தியை 'சற்றே விலகியிரும் பிள்ளாய்' என விலகச் சொன்னது.இந்த சாதிவாரிக் கணக்கெடுப்பில் நந்திகளை விலகச் சொல்லுமளவிற்குக் கூட எந்தத் தெய்வத்திற்கும் மனம் வரவில்லையே அதுதான் கொடுமை. தீயில் புண்பட்டு இறந்த நந்தனை பொன்னார் மேனியனாய் சிவலோகப் பதவியடைய வைத்த சமுதாயம்தானே.

இன்னும் கூட ராகுல் காந்தியால் தாழ்த்தப்பட்டவர்கள் வீட்டிற்குச் செல்ல முடிகின்றதேயொழிய அவர்களை சமுதாயத்தின் மையப் புள்ளியாக மாற்ற இயலவில்லை என்பதுதான் இந்தச் சமூகத்தின் கோரமான முகம்.இந்தச் சூழ் நிலையில் நமது இருபதாம் நூற்றாண்டில் இவையெல்லாம் இல்லை என்று கூற சாதி வாரிக் கணக்கெடுப்பை எதிர்ப்பவர்களால் இயலுமா?? எதிர்ப்பவர்கள் தங்களின் பெயரின் பின்னாலுள்ள சாதிப் பெயரைக் கைவிடக்கூட இயலாதவர்கள்.

ஆனந்த் சர்மா என்று இன்னும் சாதிப் பெயரை அலங்காரமாக கைவிடாத மத்திய அமைச்சர் ஏதோ கணக்கெடுப்பினால் இந்தியா இனிமேல்தான் சாதிவாரியாகப் பிரியும் என்பது போல் பேசுவதுதான் விந்தையாக உள்ளது. உழைக்கும் மக்களுக்கான அரசியல் இயக்கம் என கூறிக் கொள்ளும் நமது மார்க்சீய பொதுவுடைமைக் கட்சி தங்களது கட்சி ஏன் பலமிழந்து வருகின்றது என்பது குறித்து மறு பரிசீலனை செய்ய வேண்டியதன் அவசியத்தை உணராது உள்ளது.இன்னும் சாதீயம் சார்ந்த இந்திய நிலையினை மறுதலித்து வருவது அதனை வளர்ச்சிக்கு இட்டுச் செல்லாது என்பதுதான் இன்றைய நிதர்சனம். இந்தியாவில் உழைக்கும் மக்கள் யாரென்றால் தாழ்த்தப்பட்ட மற்றும் பிற்படுத்தப்பட்ட மக்களாகத்தான் இருக்க முடியும் என்பதை உணர மறுப்பது தலைவர்கள் அல்லது அதன் மத்தியக் குழு உறுப்பினர்களில் பெரும்பான்மையோர் இந்தச் சமுதாயங்களைச் சாராத முற்பட்ட இனமாயிருப்பதனால்தானே. அதனால்தான் பாராளுமன்றத்திலும் சரி அவர்கள் ஆட்சி செய்யும் மாநிலங்களிலும் சரி அவர்களின் வளர்ச்சியானது நாளுக்கு நாள் குறைந்து வருகின்றது. ஒரு வேளை இந்திய கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கு புரோகிதம் எனும் தொழில்தான் மிகுந்த உடலுழைப்பைக் கோருவது என்பதால் அந்தத் தொழில் செய்பவர்கள்தான் உழைக்கும் மக்கள் என்ற எண்ணம் இன்னும் கலையாது உள்ளதோ என்னவோ? இதை அவர்கள் பொலிட் பீரோதான் முடிவு செய்ய வேண்டும்.

குறிப்பாக சாதிவாரிக் கணக்கெடுப்பில் மார்க்சீய கம்யூனிஸ்ட் கட்சியின் திரு சீத்தாராம் யெச்சூரி அவர்கள் பிற்படுத்தப்பட்டோர் மக்கள் தொகைக் கணக்கெடுப்பு என்பது மக்கள் தாங்களாகத் தரும் விவரங்கள் என்பதனால் அது உண்மையான கணக்கெடுப்புக்கு வழி வகுக்காது என்று கூறுகின்றார்.வாதத்திற்காக அதைச் சரியென்று எடுத்துக் கொண்டாலும் பிற்படுத்தப்பட்டவர்கள் பற்றிய எண்ணிக்கைக்கு இதுவரையில் அவர் குரலெழுப்பாதது ஏன்? மேலும் தாங்களாகக் கூறுவதாலேயே யாரும் பிற்படுத்தப்பட்டவர்களாகி விட முடியாது என்பதையும் அதன் காரணமாக அதற்கான சலுகைக்கு அவர்கள் உகந்தவர்களாகி விட மாட்டார்கள் என்பதும் புரியாமலா பேசுகின்றார். ஒருவேளை எண்ணிக்கை குறைவாக வந்து விடும் என்று உண்மையிலேயே பிற்படுத்தப்பட்டவர்கள் மேலுள்ள அக்கறையால் அவர் அச்சப்படுகின்றாரோ ? என்னவோ? மக்கள் தானாக முன்வந்து தராவிட்டால் அவர்களுக்கு அபராதம் தீட்ட அரசு திட்டமிடுகின்றதென்பதை சீத்தாராம் யெச்சூரி கண்டிக்கவில்லையென்பதும் குறிப்பிடத்தக்கது. பெரியார், அம்பேத்கர் கொள்கைகளை இன்னும் முழுமையாகச் செயல்படுத்தவில்லை என்று அங்கலாய்க்கும் திரு பிரகாஷ் காரத் இன்னும் சாதிவாரிக் கணக்கெடுப்பு பற்றிக் கூறத் தயங்குவதும், திருமதி பிருந்தா காரத் அவர்கள் உள் ஒதுக்கீடின்றி பெண்கள் இட ஒதுக்கீடு தற்போது உள்ள நிலையிலேயே சட்டமாக்கப்படவேண்டும் என்றும் கூறுவது பெரியார் மற்றும் அம்பேத்கர் அவர்களின் கொள்கைகளை முழுமையாக்கும் என்பதால்தானோ என்னவோ?

இவர்களெல்லாம் மண்டல் குழு அறிக்கையின் பயனாக இன்று மத்திய அரசுப் பணியில் பிற்படுத்தப்பட்டோர் எண்ணிக்கை அபரிமிதமாகக் கூடி விடும் என அச்சப்படுவதால்தான் இன்றுவரை அது குறித்து எந்த அக்கறையும் காட்டாது உள்ளனர். இது குறித்து மத்திய அரசிடம் இன்று வரை வெள்ளை அறிக்கை கேட்டதுண்டா? இந்தப் பாட்டாளிகளுக்காக அவதாரமெடுத்த கட்சி? இன்றுவரை பெரும்பான்மைச் சமுதாயமான பிற்படுத்தப்பட்டவர்கள் அரசு அதிகாரமுள்ள பதவிகளில் சொற்ப சதவீதவீதத்திலேயே உள்ளனர் அதாவது தாழ்த்தப்பட்ட சமுதாயத்தை விடவும் பின் தங்கியுள்ளனர் என்பதை எங்காவது பேசியோ கேள்வி கேட்டோ உள்ளனரா?

இந்தியாவின் நவீன வேளாண் அமைச்சர், உணவு உற்பத்தியில் இந்தியா தன்னிறைவு பெற வழி வகுத்தவர் என்றெல்லாம் பேசப்படும் சி சுப்பிரமணியம் அவர்கள் தனது தொகுதியாக ஏன் பழனி நாடாளுமன்றத்தைத் தேர்ந்தெடுத்தார் என்றால் அது முருகனின் திருத்தலம் என்பதாலல்ல அங்கு அவரின் இன மக்கள் அதிகமாக இருப்பதால்தான்.

படித்தால் , பதவிகளில் அமர்ந்து விட்டால் சாதிகள் அழிந்து விடும் என்பது உண்மையானால் படித்த வாக்காளர்கள் நிறைந்த தொகுதிகளில் இந்த சாதிவாரிக் கணக்கெடுப்பை எதிர்ப்போர் நிற்க வேண்டும். அங்குள்ள மக்கள் சாதி என்பதையே எண்ணாது மக்கள் நலனை மட்டும் கருத்தில் கொண்டு இவர்களுக்கு வாக்களிப்பார்கள்தானே. ஏனென்றால் அங்கு சாதி முக்கியமாயிருக்காதல்லவா?? படித்த உயர்ந்த அந்த மக்கள் திறமையாளர்களைத்தானே தேர்ந்தெடுப்பார்கள்.

தென் சென்னைத் தொகுதியில் சிறந்த பாராளுமன்ற உறுப்பினர் எனப் பெயர் பெற்ற திரு இரா செழியன் அவர்கள் நின்ற போதில் அந்த படித்த நபர்கள் அதிகம் வாழும் தொகுதி உறுப்பினர்கள் அவரை குறைந்த பட்ச வாக்குகள் வித்தியாசத்தில் கூட தேர்ந்தெடுக்க மறுத்தது சாதியன்றி வேறொன்றுமில்லை. அதை அவர் வேண்டுமானால் மறுக்கலாம் அல்லது மறைக்கலாம். உண்மை பட்டவர்த்தனமானது. இவர்களெல்லாம் சாதிவாரிக் கணக்கெடுப்பை மறுப்பதனால் இவர்களுக்கு தென் சென்னையில் அதிக வாக்குகள் விழ வேண்டுமல்லவா? உண்மை அதுவல்ல.

வளர்ந்து விட்டவர்களையும் வசதி படைத்தவர்களையும் தங்களது ஆளுமைக்குள் கொள்வினை கொடுப்பினை மூலம் கொண்டு வந்து விட்ட வளர்ந்த சமுதாயத்தின் எடுப்பார் கைப்பிள்ளைகளாக இவர்கள் மாறியிருக்கலாம். ஆனால் அந்தச் சமுதாயங்கள் இவர்களை இவர்களின் பதவியும் பணமும் இருக்கும் வரைதான் தங்களவர்களாய் ஏற்றுக் கொண்டது போல் நடிக்கும். பதவியிழந்த மறு நிமிடம் இவர்கள் எந்தத் தெருவுக்குள் சொந்தம் கொண்டாட முடியும். அப்படியான நிலை வந்தால் உடனே இவர்களெல்லாம் ' நான் உங்கள் வீட்டுப்பிள்ளை, உங்களில் ஒருவன், நமது இனத்தை உயர்த்திப் பிடிக்க எனக்கு வாக்களியுங்கள்' என்று பொய்யாய் பேசுவதைக் கேட்டு கண்ணீர் மல்க நமது வாக்குகளை நாம் இவர்களுக்குத் தரத் தயாராயிருப்பதால்தானே இவர்கள் இந்தத் தில்லு முல்லுளை அரங்கேற்றுகின்றனர்.

சனி, ஏப்ரல் 17, 2010


தலைதூக்கும் வர்ணாஸ்ரமமும் தாங்கிப் பிடிக்கும் அச்சு ஊடகங்களும்


அண்ணாச்சியைச் சொல்லுங்கள் ... அவாள்களைச் சொல்லாதீர்கள் - டெக்கான் க்ரானிகிளின் அங்காடித் தெரு திரைப்பட விமர்சனம்.

பெரு நகரங்களில் தொலைந்து போன சிறு நெஞ்சங்களின் அவலத்தை வெள்ளித் திரையின் வழக்கமான அரிதாரப் பூச்சுகளின்றி சொல்லிய முக்கியமானதொரு திரைப்படம் அங்காடித் தெரு. இதற்கான பல விமர்சனங்கள் அதன் சிறப்பைக் கூறிச் சென்ற போதிலும் கடந்த 04.04.2010 அன்று இது குறித்த தனது விமர்சனத்தை டெக்கான் நாளிதழ் வெளியிட்டது. அதில் அந்தப் படம் பற்றிய விமர்சனத்தின் முடிவில் அதை விமர்சித்திருந்த திரு A S அவர்கள் படத்தில் அந்த தங்கை பாத்திரம் தேவையற்றது என்று கூறியதுடன் அந்த பிராமணக் குடும்பம் பற்றிய காட்சி வலிந்து புகுத்தப்பட்டுள்ளது என்று கூறியுள்ளது அவரின் தனிப்பட்ட கருத்தாகவோ அல்லது அந்தப் பத்திரிக்கையின் கருத்து எனவோ எடுத்துக் கொள்ள முடியும். ஏனென்றால் பலர் விமர்சிக்க ஆரம்பித்தவுடன் அது அதை எழுதியவரின் தனிப்பட்ட கருத்து என்பதாக முடிகின்றது.

அதாவது ஒரு திரைப்படத்தில் ஓரிடத்தில் வரும் ஒரே ஒரு காட்சிக்கு அவர் இப்படித் துடித்துப் போகிறார் என்றால் முழுப்படமும் ஒரு சமுதாயத்தைச் சார்ந்தவர்களைக் குறிப்பிட்டு எடுக்கப்பட்டதற்கு அந்தச் சமுதாய மக்கள் துடிக்க மாட்டார்களா?

அவர் அதை சாதாரணமாகக் கூறாமல் பிராமணக் குடும்பம் என்று கூறியது உள் நோக்கமுடையதாகத்தானே தோன்றுகின்றது?

"எப்பொருள் யார் யார் வாய்க் கேட்பினும் அப்பொருள்
மெய்ப்பொருள் காண்பது அறிவு" என்பதுதானே உண்மையாயிருக்க இயலும்.

அதாவது நீங்கள் எந்த சமுதாயத்தைப் பற்றி வேண்டுமானாலும் படம் எடுங்கள், அவர்களை எப்படி வேண்டுமானாலும் விமர்சியுங்கள் அது அரசமைப்புச் சட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ள அடிப்படை உரிமை என நாங்கள் வாதாடி வெற்றி பெற்றுத் தரத் தயாராக இருக்கின்றோம். ஆனால் அவாள்களைப் பற்றி மட்டும் தவறாகக் கூறாதீர்கள் என்ற தொனியில் ஒருவர் எழுதுவதும் அதனை பிரபல நாளிதழ் சரியென்று உணர்வதாலோ அல்லது தங்கள் பத்திரிக்கையின் பெரும்பாலான வாசகர்கள் அவாள்கள்தான் என்பதாலோ வெளியிடுகின்றன.

நாம் அண்ணாச்சிகளுக்காகவோ, அவாள்களுக்காகவோ வாதிடவில்லை, தொழிற் பெருக்கத்தில் மனித மனம் மிருகமாகி தனது சுய நலத்திற்கு எதையும் யாரையும் பழி கொடுக்கும் சூழல் இருப்பதை நமது மக்கள் உணர்ந்திருப்பதாலேயே அங்காடித் தெரு போன்ற படங்கள் வெற்றி பெருகின்றன. ஆனாலும் அதிலும் தங்கள்??? சமுதாயத்தைப் பாதுகாக்க முனையும் நபர்களையும் அதைப் பிரசுரிக்கத் தயங்காத பத்திரிக்கைகளையும் நாம் என்ன செய்யப் போகின்றோம். பல காலங்கள் முன்பாக மு வரதராசனார் அவர்கள் சொன்னது போல் அவற்றை நிராகரிக்கும் எண்ணம் நம்முள் எத்தனை பேருக்கு உள்ளது? அந்தப் பத்திரிக்கையை விநியோகிக்க மறுக்கக் கூடிய பிற சமூக விநியோகிப்பாளர்கள் எத்தனை பேர்?

இவற்றை நாம் செய்ய மாட்டோம் என்ற காரணத்தினால்தானே அவர்கள் இன்று நமது தமிழ் மண்ணில் தங்கள் மனம் போன போக்கில் எழுதிக் கொண்டும் பரப்பிக் கொண்டும் திரியும் சூழல் உள்ளது. இதில் வேடிக்கைக்குரிய விஷயம் என்னவென்றால் எண்பதுகளின் இறுதியில் திரு பாரதிராஜா அவர்கள் பல்வேறு சிக்கல்களுக்கிடையில் "வேதம் புதிது" என்று பெயர் வைத்தவுடனேயே பற்றிக்கொண்டது நெருப்பு, மாண்பமை தணிக்கைத்துறையின் மூலமாக அந்தப் படம் வெளி வரத் தடை போட அவர்களால் முடியும் , முடிந்தது என்பதுதான் வரலாறு. அன்றைய முதல்வர் திரு எம் ஜி ராமச்சந்திரன் அவர்களின் முயற்சியால் மத்திய தணிக்கைத் துறை மூலமாக அந்தப் படம் வெளிவர பாரதிராஜாவே படாத பாடு பட வேண்டியிருந்தது. அன்றைய முதல்வரும் கூட அதற்கு வக்காலத்தாக மூதறிஞர் ராஜாஜி இருந்திருந்தால் அந்தப் படத்தைப் பாராட்டியிருப்பார் என்று குறிப்பிட்டதாக நினைவு.பாரதி ராஜா என்பதால் முதல்வர் தலையிட்டு படம் வெளிவந்தது. அதுவே ஒரு சாதாரண இயக்குனராகவோ, புதுமுக இயக்குனராகவோ இருந்திருந்தால் அவர் இன்னேரம் காணாது போயிருப்பார்.

கருத்தம்மாவில் கள்ளிப்பாலை உபயோகித்துப் பெண் குழந்தைகளை அழிக்க நினைக்கும் சமூகமாகத் தங்களைக் காட்டும் போதிலோ, பல படங்களில் தங்களை வன்முறையாளர்களாக அல்லது அரிவாளால் நியாயம் பேசும்சமூகமாகக் காட்டும்போதோ அந்தச் சமுதாயம் தங்களைப்பற்றிய விமர்சனம் என்று கொதிக்கவில்லை, கொள்ளைப்புற வழியாகத் தடைகளையிடவில்லை .. இன்றும் அண்ணாச்சிகளின் சமுதாயம் தங்கள் சமுதாய செல்வந்தர்களின் மீதான தாக்குதல் என்று அதை எடுத்துக் கொள்ளவில்லை.. எந்தப் போராட்டத்திலும் குதிக்கவில்லை.. தமிழகத்தில் அவர்கள் இல்லாத ஊர்களே இல்லாத நிலையில் அப்படியொரு போராட்டம் அவர்களுக்கு பெரிய காரியமல்ல எனும் நிலையில் அவர்கள் அமைதியாயிருப்பது அந்தச் சமுதாத்தின் பெருந்தன்மை.

ஆனால் இப்படியெல்லாம் பெருந்தன்மையாய் பெரும்பான்மைச் சமூகங்கள் இருப்பதால்தான் சிறுபான்மைச் சமுதாயம் ஆட்டமாய் ஆடுவதும் அவர்களின் கருத்துக்களை அவர்கள் சார்ந்த அச்சு ஊடகங்கள் சிரமேற்கொண்டு பரப்புவதும் தொடர்கின்றது. நமது எதிர்வினையற்ற தன்மையால்தான் இவர்கள் இன்னும் பெரும்பான்மை மக்களை ஆட்டிப் படைக்கின்றனர்.

இந்தக் கட்டுரை முதன் முதலில் கீற்று வலைத்தளத்தில் கடந்த ஏப்ரல் 17 அன்று வெளியிடப்பட்டது.

சனி, மார்ச் 27, 2010















இந்தியப் பாராளுமன்றத் தேர்தல் - யானை ராஜேந்திரனின் நீதிமன்ற வழக்கு தொடர்பாக ...

இந்தியப் பாராளுமன்றத் தேர்தலில் தேசீயக் கட்சிகள்தான் போட்டியிட வேண்டுமென்று ஒரு சமூக நல ஆர்வலர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்துள்ளார்.அதற்குக் காரணமாக அவர் மாநிலக் கட்சிகள் பாராளுமன்றத்தை நடைபெறவிடாமல் தடுப்பதாகக் குற்றம் சாட்டுகின்றார். இது மேம்போக்காகப் பார்த்தோமேயானால் மிகவும் சிறந்த முயற்சியாகத் தோன்றும். நமது பத்திரிக்கைகளும் அதை ஒரு சிறந்த முயற்சியாகத் தாங்கிப் பிடிக்க எல்லாவித முயற்சிகளையும் மேற்கொள்ளும். ஆனால் உண்மையில் என்ன நடக்கின்றது.

நமது தேர்தல் முறைகளில் மாற்றம் வேண்டும் நபர்கள் பலவித கட்சிகள் சார்ந்த / கட்சி சாராத பலதரப்பட்ட வேட்பாளர்களாகப் போட்டியிடும் காலத்திலேயே தங்களுக்கு யாருக்கும் வாக்களிக்க விருப்பமில்லை என்ற 49(o) படிவம் தரப்பட வேண்டும் என்று வலியுறுத்தும் சூழ்நிலையில் இரு கட்சிகள் மட்டும் போட்டியிடவேண்டும் என்ற வாதம் எப்படிச் சரியானதாயிருக்க முடியும்?

மக்கள் பிரதிநிதிகள்தான் பாராளுமன்றத்தின் நோக்கமே தவிர, அத்தகையவர்களை அவர்களின் செயல்பாடுகள், கொள்கைகளைக் கொண்டு கட்சி சார்ந்தவர்களையோ, கட்சி சாராதவர்களையோ தேர்ந்தெடுப்பதில் என்ன தவறு??

மாநிலங்கள் பிரிக்கப்பட்டதன் பின்னணியையும், மாநிலக் கட்சிகளின் வளர்ச்சியின் காரணங்களையும் புரியாமல் எழுப்பப்படும் வாதம்தான் இந்த இரு கட்சி ஆட்சிமுறை. மாநிலக் கட்சிகள் தங்கள் பகுதி மக்களுக்காக மத்தியில் அழுத்தம் தரக் கூடாதென்றால் மக்களாட்சியெனும் தத்துவமே தேவையற்றதாகி விடாதா?

சென்ற அய்க்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியின் போது அதிகமான நாட்கள் பாராளுமன்றத்தை முடக்கியது பாரதீய ஜனதாக் கட்சியும் அதன் கூட்டணிக் கட்சிகளும்தான். குறிப்பாக பாரதீய ஜனதாதான். அதனால் பாரதீய ஜனதாக் கட்சியை பாராளுமன்றத் தேர்தலில் போட்டியிடக் கூடாது என்று ஆணையிட முடியுமா? அல்லது நீதியாணைதான் பெற முடியுமா??

ஒரு புறம் அதிகாரப் பகிர்வு என்று கூறி மாநில அரசின் அதிகாரங்களை மாநகராட்சி,நகராட்சி போன்ற உள்ளாட்சி அமைப்புகளுக்கு அதிக அதிகாரம்வழங்க வேண்டி பரவலாக்குவதும் மற்றொருபுரம் மத்திய அரசு நினைத்தால் எதையும் மாற்ற இயலுமாறு அதிகார குவிப்புக்கு வித்திடுவதாகவும்தான் இத்தகைய முயற்சிகள் அமையும்.

இன்று உலக மயமாக்கலில் நுகர்வுக் கலாச்சாரத்தில் பலவிதங்களிலும் போட்டிகளை எதிர்கொள்ள வேண்டும் என்ற நிலைப்பாடு உள்ள போது பாராளுமன்றத் தேர்தலில் மட்டும் பலமுனைப் போட்டிகள் கூடாது என்பது என்ன நியாயம்??

மற்றுமொரு முறையில் சிந்தித்துப் பார்த்தோமேயானால் இவர் இந்த முறையை ஏன் பாராளுமன்றத்திற்கு மட்டும் தேவை என நினைக்கின்றார். மிகவும் நேர்மையான முறையில் சிந்த்துப் பார்த்தோமேயானால் ஒரு காலத்தில் கேரள சட்டமன்றப் பெரும்பான்மையானது சில சுயேட்சை அல்லது சிறு கட்சிகளின் ஓரிரு சட்டமன்ற உறுப்பினர்களின் ஓட்டில் ஊசலாடியது. அத்தகைய நிலையானது நமது தேர்ந்த வாக்காளர்களால்தான் நிராகரிக்கப்பட்டதேயன்றி எந்தவொரு நீதிமன்றத் தலையீடுகளாலோ அல்லது சட்டத்தின் மூலமாகவோ அல்ல என்பதை நாம் இன்று நினைத்துப் பார்த்திட வேண்டும்.

மாநிலத்தில் சுயாட்சி, மத்தியில் கூட்டாட்சி என்ற தத்துவமானது அந்தக் கொள்கையில் பிடிப்புள்ள கட்சிகளால் நிறைவேற்றப்பட்டதோ, இல்லையோ இன்று நமது மக்களால் நிறைவேற்றப்பட்டுள்ளது என்பதுதான் நிதர்சனமான உண்மை. அப்படியே அது தேவையில்லையென்றாலும் அதை மக்கள்தான் முடிவு செய்ய வேண்டுமேயன்றி ஒரு சில நீதிபதிகள் கோடிக்கணக்கான மக்களின் மீது இந்த இருவரில் ஒருவருக்குத்தான் நீங்கள் வாக்களிக்க வேண்டும் என உத்தரவிடுவதாக அமையக் கூடாது.

தத்தெடுக்க வந்த நபரிடம் தனது குழந்தைகளிலேயே நல்ல குழந்தை, எதிர் வீட்டுக் கூரையில் தீயிட்டுக் கொண்டிருக்கும் குழந்தைதான் என்பது போல, இன்று சிறந்த கட்சி என்பது (மாநிலக் கட்சியோ, தேசியக் கட்சியோ) அந்தக் குழந்தை போன்றுதான் உள்ளது. இந்தச் சூழ் நிலையில் அந்தக் குழந்தையைப் போட்டியில் இருந்து நீக்கி விட்டால் அதை விடவும் அபாயகரமான கட்ச்சிக்குத்தான் நாம் வாக்களிக்க நேரிடும்.

மக்களுக்கான சட்டங்கள், மக்களின் ஆட்சி என்றால் அது மக்களின் நியாயமான ஆசைகளை பூர்த்தி செய்வதாய் மக்கள் பிரச்சனைகளில் ஈடுபாடுடையதாய், மக்களுடன் தொடர்பு கொள்ளக் கூடியதாய் இருக்க வேண்டும். படிக்காதவனின் பிரச்சனைகளை படிக்காதவன் முழுமையாய்த் தெரிந்து கொள்ள முடியும், கண்ணில்லாதவன் துயரை என்னதான் நாம் உணர முடிந்தாலும் முழுமை என்பது அவன் உணர்வதுதான், அது குறித்து அவனை விடக் கருத்துச் சொல்ல கண்ணற்றவர் துயரை மிக உயரிய அளவில் நேசிக்கக் கூடிய மனிதரன்றி யாராலும் இயலாது. அத்தகைய பிறர் துயரை தன் துயராய் எண்ணி உணர்வோர் ஒரு சிலரே!! எனவே அவரவர் துயரை அவரவர், அவர் அருகாமையிலுள்ளோர்தான் கூறவோ உணரவோ இயலும். அந்த வகையில் பார்த்தோமேயானால் மாநில மக்களின் அருகாமையில் மாநிலக் கட்சிகள் இருந்ததாலேயே மக்கள் அவர்களுக்கு வாக்களிக்கின்றனர். அவர்களை விட்டு வெகு தூரம் விலகிச் சென்று விட்ட தேசியக் கட்சிகள் இந்த மாநிலக் கட்சிகளின் துணையின்றி எப்படி வாக்கு வாங்க முடியும். அப்படியொரு சூழ் நிலை உருவாகுமேயானல் அது வேறு வழியின்றி வற்புறுத்திப் பெறும் வாக்காகவே அமையும். மக்களின் தேவைகளை உணராத மத்திய அரசு எந்த வகையில் இந்த மக்களுக்கு சேவை செய்ய இயலும்.

அப்படியென்றால் இன்னொன்றையும் நாம் தெளிவு படுத்துக் கொள்ள வேண்டும், மாநில அதிகாரங்களை மத்திய அரசு பாதிக்காமல் இருக்க வேண்டும்,அந்தந்த மாநில மக்களுக்கான நலத் திட்டங்கள் போன்றவற்றை அந்தந்த மாநிலத்திடமே விட்டு விட வேண்டும். மாநில நீதிமன்றங்களை உச்ச நீதிமன்றங்களாக்கிட வேண்டும், தலைமை நீதிபதியென்பவர் அந்தந்த மா நிலம் நியமிப்பவராகத்தானே இருக்க இயலும்.எல்லாவற்றுக்கும் அமெரிக்காவை எடுத்துக் காட்டும் நம்மவர்கள் அங்கு இருக்கும் அதிகாரப் பகிர்வுகள் பற்றியோ, சட்டபூர்வமாக கருப்பின மக்களுக்கான இட ஒதுக்கீடு பற்றியோ ஏன் அதிகம் எழுதுவதில்லை.

மேலும் நமது அரசமைப்புச் சட்டத்தில் உள்ளது போல் மத்திய அரசு, மாநில அரசு மற்றும் இரு அரசுகளுக்கிடையேயான அதிகாரப் பகிர்வு என்பது பல்வேறு விதமான நடைமுறைச் சிக்கல்களில் செல்லும் அபாயமும் உள்ளது. இரு தேசீயக் கட்சிகளும் இணைந்து தங்கள் அதிகாரத்தை அனைத்து மாநில அரசின் மீதும் செலுத்தக் கூடிய அபாயமும் அதைப் பாராளுமன்றத்தின் இரு அவைகளிலும் வெகு எளிதாக நிறைவேற்றி விட்டு, மாநிலங்களில் தங்கள் கட்சி ஆட்சியதிகாரம் பெற்றுள்ள சில மாநில அரசுகளின் மீது தங்களுக்குள்ள அதிகாரத்தைப் பயன்படுத்தி நிறைவேற்ற முயற்சி செய்யாமலிருக்கும் என்பது என்ன நிச்சயம்??

இன்று வரையறை செய்யப்பட்ட கல்வி, விவசாயம் போன்றவற்றிலேயே கருத்து முரண்பாடுகள் வரும் போதில், இத்தகைய அதிகாரக் குவிப்பு என்ன நல்லதைச் செய்து விட முடியும்? பெண்கள் இட ஒதுக்கீட்டு மசோதாவைப் ஆளும் காங்கிரஸ் கட்சியும் பிரதான எதிர்க்கட்சியான பாரதீய ஜனதாக் கட்சியும் ஒன்று கூடி நிறைவேற்ற முற்படுவதைப் பார்த்தோமேயானால் இந்த நடைமுறைச் சிக்கல் எளிதில் புரிய வரும். இதை சில பத்திரிக்கைகள் அந்தக் கட்சிகள் பெண்கள் மசோதாவில் அவர்களுக்குள்ள பிடிப்பாகக் கருதுவதுதான் இன்னும் கொடுமை.(தமிழக அரசியல் - 12.03.2010). அதாவது ஜாதிகளாலேயே வேட்பாளர்கள் நிர்ணயிக்கப்படுவதாகவும் அதனால் பெண்கள் இட ஒதுக்கீட்டின் படியும் உள் ஒதுக்கீடு இல்லாத நிலையிலும் கூட எப்படியும் பிற்படுத்தப்பட்ட தாழ்த்தப்பட்ட வேட்பாளர்களே அதிகமாக இடம் பெறுவர் என கூறுகின்றனர்.கட்சிக் கொறடா உத்தரவுகளால் மனசாட்சியை அடகு வைத்துச் செயல்படும் நமது பாராளுமன்ற உறுப்பினர்களை இன்றைய பல கட்சி ஆட்சி முறைகளிலேயே நம்ப முடியாத நிலையில் இருகட்சி ஆட்சியில் எவ்விதம் முடியும்??

நமது ஜன நாயகம் பற்றித் தெரிந்தும் இவர்கள் இதை கூறுவதுதான் வேடிக்கை. கட்சி அரசியலில் கட்சித் தலைவர்கள் பார்த்து நிறுத்தும் எந்த வேட்பாளரும் வெற்றி பெறும் சூழலில், நமது யானை ராஜேந்திரன் அவர்கள் கூறுவது போல் காங்கிரசும் பாரதீய ஜனதாவும் மட்டும் போட்டியிடும் பட்சத்தில் என்ன நடக்கும். உலகிற்கு நமது கொடையாகக் கொடுத்த வர்ணப் பிரிவுகளை ஒழிக்க எந்த நடவடிக்கையும் இதுவரையில் தெளிவாக எடுக்கப்படாத சூழ் நிலையில் சாதி வாரி கணக்கெடுப்புக்கு குரல் கொடுக்க மறுப்பதும் பின் அதையே இட ஒதுக்கீட்டுக்கு எதிராகப் பயன்படுத்துவதும் இந்த இரு கட்சிகளுக்கும் இன்றுவரை விளங்காததாயிருப்பதும், இன்றும் நீதியரசர்களுக்குக் கூட விளங்காமல் கிடக்கும் நிலையில் இது போன்ற இருகட்சி ஆட்சிமுறை யாருக்கு நலன் பயக்கும் என்பதை எண்ணிப் பார்க்க வேண்டும்.

மக்களின் உணர்வுகளையும், தேவைகளையும் அறியாத தேசீயக் கட்சிகள். சொல்லப்போனால் இந்த மக்களின் மறைக்கப்பட்ட, மறுக்கப்பட்ட வரலாறு அறியாத தேசீயக் கட்சிகள் அவர்களின் அருகாமையில் வர இயலாத போது இந்த மண்ணின் மக்களுக்கான கட்சிகளாய் அவை மாற இயலாத போது, மக்களை அந்தக் கட்சிகளுக்குத்தான் நீங்கள் வாக்களிக்க வேண்டும் என நிப்பந்திப்பது சர்வாதிகாரமன்றி வேறு அல்ல.

இறுதியாக எந்த மக்களாட்சியும், மக்களுக்காக , மக்களால், மக்களைக் கொண்டு அமைக்கப்படுவதாக இருக்கவேண்டுமேயன்றி நீதியாணைகளால் அமைக்க முடியாது. அதை அமைக்க முற்படுபவர்கள் மக்களாட்சியில் நம்பிக்கையற்ற பெரும்பான்மை மக்களின் மனதறியாதவர்களாகத்தான் இருப்பர்.

இந்தக் கட்டுரையானது 'கீற்று' வலைத்தளத்தில் முதலில் மார்ச் 2010-ல் வெளியிடப்பட்டது.