புதன், பிப்ரவரி 26, 2014

சிதம்பரம் ..

தீர்ப்புகள் திருத்தப்படலாம்.??

சிறு மற்றும் அற்பத் தவறுகளுக்காக, அரசு கோயிலைத் தங்கள் வசம் முழுமையாக எடுத்துக் கொள்ளக் கூடாது. தவறுகளைச் சரி செய்ய குறுகிய காலம் அரசு தனது பொறுப்பில் எடுத்துக் கொள்ளலாம்.
வரலாறு:
ஒரு காலத்தில் தில்லை மரங்களடர்ந்த வனம்தான் இந்தச் சிதம்பரம். இப்பொழுது பிட்சாவரத்தில் உள்ளதே அதே மரங்கள்தான். சிற்றம்பலம் என்ற பெயர் மருவி சிதம்பரம் என்றாகி விட்டது. இரணிய வர்மன் எனும் மன்னன் முதல் முதலாய் கோயிலை உருவாக்கியவன், பின்னர் சோழ, பாண்டிய,பல்லவ,விஜய நகர ஆட்சியாளர்களால் விரிவாக்கப்பட்டதுதான் இந்த நடராசர் கோயில்.
பண்டைக்காலச் செப்பேடுகளின் படி இந்த ஆலயமானது கி.பி 1888 முதல் 1963 வரையில் என்றும் தீட்சிதர்கள் நிருவாகத்தில் இருந்ததில்லை. புலவர் செ ராசு அவர்களின் கூற்றுப்படி எல்லா ஆட்சியாளர்களின் ஆட்சியிலும் அந்தந்த அரசு அலுவலர்களே கோயிலின் அனைத்து நிர்வாகத்தையும் மேற்கொண்டுள்ளனர். அந்த அலுவலர்களில் யாரும் சிவ பிராமணரோ,தீட்சிதர்களோ இல்லை.
பூசை செய்வோர் கோயில் நிர்வாகிகளிடமிருந்து அறக் கொடைகள் மூலம் வரும் பிராமண போசனம்,தளிகை, சட்டிச் சோறு,பிரசாதங்கள் போன்றவற்றைப் பெற்றே வாழ்க்கை நடத்தியுள்ளனர்.
மாலிக்காபூர் போன்றவர்களின் படையெடுப்பின் போது புளிய மரப் பொந்திலும்,பின் குடுமியான் மலையில் சில காலமும்,அதன்பின் மதுரையிலும் இருந்த நடராசர்,ஒரு வழியாக மராத்தியர் உதவியுடன் ஊர் வந்து சேர்கிறார். அதுவரையில் இந்த நடராசரை ஆராதித்தவர்கள் எந்த மூவாயிரவரோ?அவர்களும் ஒரு வேளை மூவாயிரவர்களின் கிளைகளோ அது அந்த மூவாயிரமானவருக்கே (அட .. அந்த நடராசர்தான்) வெளிச்சம்.
பலரின் நிர்வாகத்தின் கீழிருந்த கோயிலானது பிச்சாவரம் ஜமீன் கைகளுக்கு வந்து சேர்கின்றது. கோயிலின் அணிகலன்களும்,சாவியும்,பிச்சாவரம் ஜமீந்தாரர் வசம் இருந்துள்ளன. அர்த்த சாமப் பூசை முடிந்தவுடன் கோயிலைப் பூட்டி சாவியைப் பல்லக்கில் வைத்துக் கொண்டு சென்று சாவியை ஒப்படைத்துள்ளனர். அதே போல் அதிகாலை சென்று சாவியினை வாங்கி வந்துள்ளனர்.
புராண விளக்கம்,சட்டப்படியான சாட்சியமாகுமா?
மூவாயிரவர் கையிலையிலிருந்து வந்ததாகவும், அவர்களில் ஒருவர் சிவ பெருமான் எனவும் பரமார்த்த குரு கதையாக நமக்குத் திரும்பவும் அறிவுப் பிரச்சாரம் செய்யக் கிளம்பியுள்ளனர். தகுதி திறமையேதுமற்ற நமக்கு அவர்கள் கூறும் புராண விளக்கங்களை ஏற்பது தவிர என்ன பாக்கியமிருக்க முடியும்,அதுவும் நீதி மன்றமே கூறிய பின்னர்.
புராணங்கள்: சிறு விளக்கம்..
செருக்கு தவிர் புராணம்:
மனதில் நினைத்தாலே கற்பு போய்விடும் எனும் ஒரு புராணக் கதை. பிற ஆடவன் வேறு கண்ணோட்டத்தில் கண்டாலே போகும் கற்பென்பது ஓர் புராணம். அடுத்தவன் மனைவியை அடைய நினைத்த ராவணன் அரக்கன். மணமான ராமனை நினைத்த சூர்ப்பனகை ஒரு அரக்கி. இவைகளும் புராணங்கள்தான். ஆனால் அதே புராணங்களில் தெய்வீகம் எப்படியுள்ளதென்றால்..
அழகென்றால் அழகு,அப்படியொரு அழகு. பத்தினிப் பெண்களை அதிலும் ரிஷிகளின் தவ வலிமைக்குக் காரணமான ரிஷி பத்தினிகள் தங்கள் நிலை மறந்து வீதியில் தொடரும் வண்ணமான அழகு அந்தப் பரதேசிக்கு. ரிஷி பத்தினிகள் மேய்ந்த அழகு..மேய்த்த அழகுக்குச் சொந்தக்காரர் ஆடல் வல்லான்.
அந்தப்புறம் பார்த்தோமேயானால் எப்பொழுதும் மோகினி வேடம் தரிக்கும் விஷ்ணு. முக்காலம் உணர்ந்த,தவ ஸ்ரேஷ்டர்களான ரிஷிகள் மதி மயங்கி விரக தாபத்தில் விழுந்து புரள... தாருகா வனத்தின் வயோதிக வாலிப அன்பர் அன்பிகளின் பல்வீனத்தை உணர்த்திய தெய்வீகங்கள்.
புராணங்களில் கூட இந்த ரிஷிகள் தாங்கள் மோகினி பின்னால் சென்று மேய்ந்ததனைப் பற்றி நினைக்காமல் ஆமாம் அது பற்றி அந்த ரிஷி பத்தினிகள்தானே நினைக்க வேண்டும், தங்கள் தர்ம பத்தினிகளை மேய்த்த ஆடல் வல்லானை நோக்கித்தான் பாம்புகளை,மழுவை ஏவினார்கள் அவற்றையெல்லாம் இன்னமும் ஏந்திக் கொண்டுதான் உள்ளார் நடராசர். திரிகால ஞானிகளான ரிஷிகளும் ரிஷி பத்தினிகளுமே இப்படியென்றால் பாவம் இத்தரை மாந்தர்கள் என்பதுதான்,
கலிங்கத்துப் பரணி தொட்டு,சினிமாவுக்குப் போன சித்தாளு கதை வரை தொட்டுத் தொடரும் நிகழ்வு தெரிந்தவர்களுக்கு இவையெல்லாம் புதிதொன்றுமில்லை.
யாகங்கள்
வேதாகம தீட்சை பெற்று வேத முறையினைப் பின்பற்றுவதாகக் கூறும் தீட்சிதர்கள் வேதம் சொல்லும் ஆடு,மாடு,குதிரை ஆகியவற்றினைப் பலி கொடுப்பதில்லையல்லவா?சோம யாகம் செய்யும் தீட்சிதர்கள் பசுக்களைப் பலி கொடுக்க வேண்டியதும் வேதம் சொல்வதுதான். புத்தரின் பின்னேயான இந்த அஹிம்சைத் தத்துவமானது வேதங்களுக்கு அந்நியமானதுதான்.
வேத வழிபாடு என்று கூறித்தான் அன்னைத் தமிழை தீண்டத் தகாத மொழியாக்கி, தீட்டுக் கழிக்கின்றனர். பின் ஏன் இவர்கள் வேதம் கூறும் யாகங்களை செய்வதில்லை.
அஸ்வ மேத யாகம் பற்றிப் படித்தால் இந்த சரக்குகளில் மிச்சம் மீதியென்று ஒன்றும் மிஞ்சாததென்பதால் அது பற்றி அவரவர் தெரிந்து கொள்ளட்டுமென்று விட்டு விடலாம். இந்தக் கோயிலைக் கட்டியவர்கள் யார்?அதன் உண்மையான வரலாறு என்ன?மக்களின் செல்வம்தானே கோயிலின் வருமானம். அதனை மக்களுக்கான அரசாங்கம் எடுத்து மக்கள் நலப்பணியினை கவனிக்க என்ன தடையிருக்க முடியும்.
நாங்கள் இந்துக்களல்ல.. எனும் வாதம்:
நாங்கள் இந்துக்கலள்ள. தில்லைவாழ் அந்தணர் எனும் பிரிவு தனித்துவம் கொண்டது. இப்படியொரு வாதம் இவர்களால் மட்டுமல்ல,ராமகிருஷ்ண மடத்தாலும் கூட தேவைப்படும் பொழுதில் சட்டத்தின் கண்களை மறைக்கக் கூறப்படுவது விந்தையிலும் விந்தையாயுள்ளது. இவர்கள் வணங்கும் கடவுளர்கள் இந்துக் கடவுள்களா அல்லவா என்பதனையும் இவர்கள் கூறினால் இந்துக்கள் என கூறிக்கொள்ளும் மற்றவர்களுக்குத் தெளிவு பிறக்கும் என நமபலாம்.
பெரும்பான்மை இந்துக்களுக்கு..
நந்தனாரைத் தனக்கு அருகில் அழைக்க இயலாத ஆடல் வல்லான்,தனது ந்ந்தியினைச் செல்லமாக்ச் சற்றே விலகியிரும் பிள்ளாய் என்றுதான் கூற இயலுகின்றது. பின்னர் அக்கினிக் குண்ட்த்தில் நுழைந்து (தள்ளி விடப்பட்டு) பொன்னார் மேனியனாய் நடராசருடன் அய்க்கியமான ந்ந்தனார் பற்றி இன்னும் கூட இந்திரா பார்த்தசாரதி போன்றவர்கள்தான் எழுதலாம். பிறர் எழுதினால் அவர்கள் நாத்திகர்கள் எனும் முத்திரை வந்து வாய்க்கும். சிதம்பரத்தில் இனி காலடி எடுத்து வைக்க மாட்டேன் என்று கூறி வடலூர் சென்ற வள்ளலார் ஏன் சென்றார் என்பதும் அறிய வேண்டிய வரலாறு. இருண்ட பக்கங்களில் உள்ளவை பெரும்பான்மை இந்துக்கள்  ஏளனப்படுத்தப்பட்ட வ்ரலாறு. சனாதனமா?சன்மார்க்கமா? ஒன்றா.. பலவா.. எது இந்துமதம்?
அரசமைப்புச் சட்டம்:
தேவாரப் பாடலாய் முடங்கிக் கிடக்கின்றது,அறிவியல் மனப்பான்மையை வளர்க்க வேண்டும் எனும் அரசமைப்பின் அடிப்படைக் கடமைகளுக்கான சட்டப் பிரிவு 51 A (h) . எந்த ராச ராச சோழனால் தூசி தட்டப்படுமோ தெரியவில்லை! அப்படியே தூசி தட்டப்பட்டாலும்,அதுவும் சிதம்பரம் நடராசர் கோயில் தமிழாய்த் தீண்டத்தகாத பிரிவாய் வெளிப் பிரகாரத்தில் வீசியெறியப்படுமோ..என்னவோ.. பெரும்பான்மை விழித்தாலொளிய தீர்ப்புகளில் திருத்தமிருக்காது.

குறிப்பு: பிற்படுத்தப்பட்டோரின் குரல் ஜனவரி 2014 இதழில் வெளிவந்தது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக